தமிழகத்தில் கொரில்லா கிளாஸ் கார்னிங் நிறுவனம் தீவிரம்
சென்னை:அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கார்னிங் நிறுவனம், ஸ்மார்ட்போன், டேப்லெட் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் உறுதியான, பாதுகாப்பு கண்ணாடிகளை உற்பத்தி செய்து, உலகம் முழுதும் விற்பனை செய்து வருகிறது. கிட்டத்தட்ட 800 கோடி ஸ்மார்ட்போன்களில் இந்நிறுவன தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் கார்னிங் இந்தியா, 'ஆப்டிமஸ் இன்ப்ராகாம்' நிறுவனத்துடன் இணைந்து, 'பாரத் இன்னொ வேட்டிங் கிளாஸ் டெக்னாலஜிஸ்' என்ற துணை நிறுவனத்தை துவங்கியது. இந்நிறுவனம், ஸ்ரீபெரும் புதுார் அடுத்த பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், 'கொரில்லா கிளாஸ்' உற்பத்தி ஆலையை அமைத்து வருகிறது. கடந்த ஜூன் மாதம், பூமி பூஜையுடன் இதற்கான கட்டுமான பணிகள் துவங்கின. இந்நிலையில், கார்னிங் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் சுதிர் பிள்ளை தெரிவித்ததாவது:2025ம் ஆண்டின் முதல் பாதியில் கொரில்லா கிளாஸ் உற்பத்தி ஆலை செயல்பட துவங்கும். இந்த ஆலையால், கிட்டத்தட்ட 500 முதல் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.