மும்பை:இதுவரை இல்லாத வகையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்த ஒரு நிறுவனம், அதன் பங்குகளை சந்தையில் பட்டியலிடப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அண்மையில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்த 'டிராபிக்சோல் ஐ.டி.எஸ்., டெக்னாலஜிஸ்' என்ற நிறுவனத்தின் பங்குகளை, பட்டியலிடாமல் நிறுத்தி வைப்பதாக, 'செபி' அறிவித்துள்ளது.எஸ்.எம்.இ., பிரிவைச் சேர்ந்த இந்நிறுவனம், 45 கோடி ரூபாய் நிதி திரட்ட, கடந்த 10 முதல் 12ம் தேதி வரை, 66 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விலையில் புதிய பங்குகளை வெளியிட்டது. 300 மடங்கு அதிகமாக, கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய் அளவுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அது பங்குச் சந்தை வணிகத்துக்கு பட்டியலிடப்பட இருந்தது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் அடிப்படை செயல்பாடுகள், இருப்புநிலைக் குறிப்பு மற்றும் திரட்டப்படும் நிதியின் பயன்பாடு ஆகியவை குறித்து, முதலீட்டாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, கேள்விகளுக்கு அந்நிறுவனம் உரிய பதில் அளிக்கும் வரை, பங்குச் சந்தையில் அந்நிறுவன பங்குகள் பட்டியலிடப்படாது என 'செபி' சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.
போட்ட பணம் என்ன ஆகும்?
திரட்டப்பட்ட தொகையை பயன்படுத்தத் தடை விதிக்கப்படும். பிரச்னைக்கு தீர்வு காணப்படும் வரை, தொகை மூன்றாம் நபரின் (அ) நடுவரின் கணக்கில் வைக்கப்படும். தீர்வுக்கான காலக்கெடு ஏதும் இல்லை. எனினும், குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு ஏற்படாவிட்டால், முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் தொகை திரும்பச் செலுத்தப்படும்.