ஆகஸ்டில் பங்கு வெளியீடு திரண்டது ரூ.17,000 கோடி
புதுடில்லி:சமீபகாலமாக புதிய பங்கு வெளியீடுகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், கடந்த மாதம் மட்டும், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக பத்து நிறுவனங்கள் 17,047 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. கடந்த 2022ம் ஆண்டு மே மாதத்துக்கு பிறகு, கடந்த மாதம் தான் அதிகபட்சமாக புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 17,047 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. இதில் 57 சதவீதம், அதாவது 9,715 கோடி ரூபாய், புதிய பங்கு வெளியீடு வாயிலாகவும்; மீதமுள்ள 7,332 கோடி ரூபாய் பங்குதாரர்களின் பங்கு வெளியீடு வாயிலாகவும் திரட்டப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை, புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 56 நிறுவனங்கள் 65,000 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளன. கடந்தாண்டின் இதே காலகட்டத்தில், மொத்தம் 20 புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டு, மொத்தம் 15,051 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, கடந்த மாதம் மட்டும் 25 நிறுவனங்கள் 'செபி'யிடம் விண்ணப்பித்துள்ளன. நடப்பாண்டில் இதுவரை விண்ணப்பித்த நிறுவனங்கள் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டில், 120 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கடுத்து இதுவே அதிகமாகும். திரட்டப்பட்ட நிதிரூ.17,047 கோடிஆகஸ்டில் மட்டும்ரூ.65,000 கோடிநடப்பாண்டில் இதுவரைவிண்ணப்பித்த நிறுவனங்கள்25 ஆகஸ்டில் விண்ணப்பித்தவை92 நடப்பாண்டில் இதுவரை விண்ணப்பித்தவைவிண்ணப்பித்த நிறுவனங்கள்
என்ன காரணம்?
பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகும் பங்குகளின் விலை உயர்ந்து காணப்படுவதால், முதலீட்டாளர்கள் புதிய பங்கு வெளியீட்டின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர். மேலும், பெரும்பாலான நிறுவனங்களின் புதிய பங்குகள், லாபத்துடன் பட்டியலிடப்படுவதால், குறுகிய காலத்தில் லாபம் கருதி, முதலீட்டாளர்களின் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால், தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மந்தமாக இருந்த புதிய பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கை, தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது.