கூகுள் ஏ.ஐ., தரவு மைய திட்டத்தில் அதானி ரூ.44,500 கோடி முதலீடு
புதுடில்லி: கூகுளின் ஏ.ஐ., தரவு மைய திட்டத்தில், அதானி குழுமம் 44,500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய இருப்பதாக, அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜூகேஷிந்தர் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கூகுள் நிறுவனம், இதுவரை இல்லாத அளவுக்கு, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் 1.32 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 5 ஆண்டுகளில் ஏ.ஐ., தரவு மையத்தை அமைக்க திட்டமிட்டு உள்ளது. ஏ.ஐ., பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள எழுச்சி காரணமாக, அதிக திறன் கொண்ட தரவு மையங்க ளில் பயன்படுத்தப்படும், சிப்களுக்கான தேவை அதிகரித்து உள்ளன. கூகுள் நிறுவனம், இந்தாண்டு உலகளவில் ஏ.ஐ., தரவு மையத்தை விரிவுபடுத்த, 7.50 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் தரவு மையம் அமைப்பதற்கான, முதலீட்டை அதிகரிக்க இருப்பதாக தொழிலதிபர்களான கவுதம் அதானி, முகேஷ் அம்பானி அறிவித்துள்ளனர். இந்நிலையில், அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜூகேஷிந்தர் சிங் தெரிவித்துள்ளதாவது: கூகுள் தலைமையிலான புதிய வளாகத் திட்டத்தில், அதானி என்டர்பிரைசஸ் மற்றும் எட்ஜ் கனெக்ஸ் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான அதானி கனெக்ஸ்க்கு ஒரு முக்கியமான விரிவாக்கத்தை அளிக்கும். தரவு மையத்தின் திறன், ஒரு ஜிகாவாட்டுக்கு மேல் செல்லும் போது, கூகுள் மட்டுமின்றி, எங்களுடன் பணிபுரிய பல நிறுவனங்கள் விரும்புகின்றன. உலகளாவிய தரவு மையச் சந்தையில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அதானி கனெக்ஸ், திறனை ஜிகாவாட் நிலைக்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. கூகுள் போன்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு, அதானி கனெக்ஸ் நிறுவனத்தின் இலக்கை அடைய உதவும். இந்தியாவின் ஏ.ஐ., உள்கட்டமைப்பு போட்டியில், அதானி குழுமம் முன்னணி வகிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அணுசக்தி துறையில் அதானி குழுமம் ஆர்வம் இந்தியாவின் அணு சக்தி துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து, தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜூகேஷிந்தர் சிங் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், 'விண்வெளி துறையில், அரசு -- தனியார் கூட்டு நிறுவனமாக செயல்படுவதற்கான கட்டமைப்பை அரசு உருவாக்கினால், நுழைய ஆர்வமாக உள்ளோம். அணுசக்தி துறையில், முக்கியமான இழப்பீடு தொடர்பான சட்டங்களை அரசு தெளிவாக வரையறுத்தல் அவசியம். இது எங்கள் திட்டங்களை மேலும் திறம்படச் செயல்படுத்த அனுமதிக்கும்' என்றார்.