உள்நாட்டில் காந்தம் உற்பத்தி ஊக்குவிக்க விரைவில் மானியம் ரூ.1,000 கோடி வழங்க மத்திய அரசு பரிசீலனை
புதுடில்லி:அரிய வகை தாதுப்பொருளான காந்தத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு மானியம் வழங்குவது தொடர்பாக, அடுத்த 15 நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும் என, மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். உலகிலேயே மிக அதிகளவில் காந்தத்தை உற்பத்தி செய்யும் சீனா, அதன் ஏற்றுமதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதையடுத்து, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில், மின்சார வாகனங்கள் மற்றும் செமிகண்டக்டர் சிப் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அரிய வகை காந்தங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க, மத்திய அரசு கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து, சுரங்கத்துறை அமைச்சரிடம் விவாதித்துள்ளதாகவும்; இது தொடர்பான பணிகளை, கனரக தொழில்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருவதாகவும், மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். அடுத்த 15 முதல் 20 நாட்களுக்குள் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஒரே நிறுவனத்திடம் அதிகாரம்
நம் நாட்டில் அரிய வகை தாதுக்களை எடுப்பதற்கு பொதுத்துறையைச் சேர்ந்த 'இந்தியன் ரேர் எர்த் மேக்னட்ஸ்' நிறுவனத்துக்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது. இந்நிறுவனம் மத்திய அணுசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திடம் உள்ள தாதுக்களைக் கொண்டு, ஆண்டுக்கு 1,500 டன் காந்தத்தை உற்பத்தி செய்ய முடியும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தாதுவை காந்தமாக மாற்றுவதற்கு தேவையான வசதிகளை அமைக்க முன்வரும் நிறுவனங்களுக்கு, மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை ஆறு நிறுவனங்கள் இதற்கு ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.