தமிழகத்தில் குத்தகைக்கு வரும் வேதாந்தா அனல் மின் நிலையங்கள்
புதுடில்லி:தமிழகத்தில் செயலற்று இருக்கும் தன் இரண்டு அனல்மின் நிலையங்களை குத்தகைக்கு விட, வேதாந்தா முடிவு செய்துள்ளது. இதற்காக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.துாத்துக்குடி மாவட்டத்தில் 160 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தையும், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை ஒட்டியுள்ள 128 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தையும் குத்தகைக்கு விட வேதாந்தா முடிவு செய்துள்ளது. சேலத்தில் உள்ள அனல்மின் நிலையம் வணிக ரீதியான காரணங்களுக்காக கடந்த 2017 முதல் மூடப்பட்டுள்ளது. மாநில அரசு உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 2018ல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதிலிருந்தே, துாத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையத்தின் செயல்பாடும் நிறுத்தப்பட்டுள்ளது. இவற்றில் மொத்தம் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குத்தகை தொடர்பாக வேதாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தின் மின்சார தேவை கடந்த நிதியாண்டில் 6.20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது வரும் ஆண்டுகளில் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.