புதுடில்லி: ஹரியானா சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரசில் இணைந்த மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோரை பற்றி பேச இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு பா.ஜ., தலைமை தடை விதித்துள்ளது. போராட்டம்
இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, கடந்த ஆண்டு பாலியல் புகார் எழுந்த போது, ஹரியானாவை சேர்ந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர், அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்களை அணி திரட்டி போராடினர்.இந்நிலையில் கடந்த 6ம் தேதி, தாங்கள் பணியாற்றி வந்த ரயில்வே பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், அன்றைய தினமே காங்கிரசில் இணைந்தனர். இதை தொடர்ந்து, பஜ்ரங் புனியாவுக்கு, காங்கிரஸ் விவசாயப் பிரிவு செயல் தலைவர் பதவி தரப்பட்டது. வினேஷ் போகத், ஹரியானாவின் ஜூலானா சட்டசபை தொகுதியின் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிருப்தி
இதை, பா.ஜ.,வினர் கடுமையாக விமர்சித்தனர். பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பின்னணியில் காங்கிரஸ் இருந்ததற்கான சான்று இப்போது வெளிப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.மல்யுத்த வீரர்கள் மீதான இவரது குற்றச்சாட்டு, ஹரியானா சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.,வின் செல்வாக்கை பாதிக்கும் வகையில் இருப்பதாக அக்கட்சி தலைமை கருதியது.ஹரியானாவில், இரண்டு முறை ஆட்சியில் இருந்தாலும், விவசாயிகள் போராட்டம், ஜாட் சமூகத்தினரின் அதிருப்தி உள்ளிட்டவற்றால் இந்த தேர்தலில் கடும் சவால்களை பா.ஜ., எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.இதை கருத்தில் வைத்து, பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் பற்றி ஊடகங்களின் வாயிலாக எந்த கருத்தும் கூற வேண்டாம் என்று, பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு பா.ஜ., தலைமை உத்தரவிட்டுள்ளது.