மைசூரு : கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் மைசூரு பிரிவில் பழைய, பயன்படுத்த முடியாத 118 பஸ்கள் அழிக்க அனுப்பப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள், பணிக்குச் செல்வோர் சிரமப்படுகின்றனர். இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்திலோ 50 புதிய பஸ்கள் வரும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் மைசூரு பிரிவில் மொத்தம் 447 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இவற்றில், மத்திய அரசின் தேசிய வாகனங்கள் அழிப்புக் கொள்கையின் கீழ், பழைய வாகனங்கள் கண்டறியப்படுகின்றன.ஜே.என்.என்.யூ.ஆர்.எம்., எனப்படும் ஜவஹர்லால் நேரு நகர புதுப்பித்தல் திட்டத்தின் கீழ், மைசூரு பிரிவில் 2003 - 04 காலகட்டத்தில் வாங்கப்பட்ட பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில், 118 பஸ்கள் பழமையானவை என்றும், பயன்படுத்த முடியாதவை என்றும் முடிவு செய்து, அவற்றை அழிப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.கர்நாடகாவில் பெண்கள் இலவசமாக பஸ்சில் பயணம் செய்யும் 'சக்தி' திட்டம் அமலான பின், பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. திடீரென பஸ்கள் இன்றி, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பணிக்கு செல்வோர், பெண்கள் சிரமப்படுகின்றனர். ஒவ்வொரு பஸ்சிலும் அளவுக்கு அதிகமான பயணியர் ஏறுகின்றனர்.இதுதொடர்பாக கே.எஸ்.ஆர்.டி.சி., மைசூரு பிரிவு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, 'பஸ் பற்றாக்குறையை போக்க, பி.எம்.டி.சி.,யின் 'கே.ஏ., 57' பதிவு எண் கொண்ட பெங்களூரு பஸ்கள்; 'கே.ஏ., 40' பதிவு எண் கொண்ட சிக்கபல்லாபூர் பஸ்கள் என, 30 பஸ்களை கேட்டுள்ளோம்.இதனால் தற்போதைக்கு ஓரளவு பயணியர் பயனடைவர். முதல் கட்டமாக அரசிடம் 40 முதல் 50 புதிய பஸ்களை கேட்டுள்ளோம். இம்மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்திலோ பஸ்கள் வந்துவிடும்' என்றனர்.