17 ஆண்டு போலீசுக்கு டிமிக்கி; ஹிஸ்புல் பயங்கரவாதி கைது
லக்னோ : போலீசுக்கு, கடந்த 17 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து, தலைமறைவாக இருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி, உ.பி., போலீசாரால் ஜம்மு - காஷ்மீரில் கைது செய்யப்பட்டார். உல்பத் ஹுசேன் என்ற பயங்கரவாதி, தடை செய்யப்பட்டுள்ள ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர். கடந்த 2002ம் ஆண்டு வழக்கு ஒன்றிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அவர், தலைமறைவாகி விட்டார்.அவரை, உ.பி., மாநில பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் மற்றும் ஜம்மு - காஷ்மீர் போலீசார் தேடி வந்தனர். கடந்த, 17 ஆண்டுகளாக அவர் மீது பிறப்பிக்கப்பட்டிருந்த கைது வாரன்டுகளை மதிக்காமல், அவர் பதுங்கி இருந்தார்.ஜம்மு - காஷ்மீரில் அவர் பதுங்கி இருப்பதாக, உ.பி., போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி உல்பத் ஹுசேன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரை, உ.பி., மாநிலம் சஹரான்பூருக்கு நேற்று அழைத்து வந்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.