உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக கெஜ்ரிவால் அறிவிப்பு மக்கள் ஓட்டளித்தால் மீண்டும் பதவியேற்பதாக சபதம்

முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக கெஜ்ரிவால் அறிவிப்பு மக்கள் ஓட்டளித்தால் மீண்டும் பதவியேற்பதாக சபதம்

மதுபான ஊழல் வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தன் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அக்னி பரீட்சையில் இறங்கி, மக்களின் தீர்ப்பை கேட்கப் போவதாகவும், சட்டசபைக்கு தேர்தலை முன்னதாக நடத்தும்படி கோர உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. டில்லியில், 2021 - 2022ம் ஆண்டுக்கான மதுபான கொள்கை திருத்தப்பட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.இதையடுத்து, அந்த கொள்கை கைவிடப்பட்டது. இதில் நடந்த ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் உள்ளிட்டோர் ஏற்கனவே ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.இதே வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.நிபந்தனைஆனால், 'முதல்வர் அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ அவர் செல்லக் கூடாது. துணை நிலை கவர்னர் ஒப்புதல் தேவைப்படாத ஆவணங்களில் கையெழுத்திடக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.இந்நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார்.கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:கடந்த 2014ல் லோக்பால் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்ற முடியாததால், 49 நாட்களில் முதல்வர் பதவியில் இருந்து விலகினேன். என் கொள்கைகளுக்காக பதவியில் இருந்து விலகினேன். அதிகார பதவிக்காக துடிப்பவன் அல்ல நான்.டில்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோதும், முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை. அதற்கு ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே நோக்கம்.கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என, பா.ஜ., ஆளாத மாநில முதல்வர்களுக்கு இது போன்ற நெருக்கடியை, மத்தியில் ஆளும் பா.ஜ., அளித்து வருகிறது.மத்திய பா.ஜ., அரசு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை விட சர்வாதிகாரமாக செயல்படுகிறது. அதற்கு அடிபணிந்து விடக்கூடாது. என்ன ஆனாலும், பதவியை ராஜினாமா செய்யாதீர்கள் என, பா.ஜ., ஆளாத மாநில முதல்வர்களை கேட்டுக் கொள்கிறேன்.டில்லி முதல்வர் பதவி நாற்காலி எனக்கு தேவையில்லை. தற்போது நீதித்துறையில் எனக்கு ஜாமின் கிடைத்துள்ளது. நான் குற்றம் செய்துள்ளேனா என்பதை மக்கள் மன்றத்தில் வாதிட உள்ளேன். அவர்களின் தீர்ப்புக்காக காத்திருப்போம்.அக்னி பரீட்சைஇதற்காக அக்னி பரீட்சையில் இறங்க உள்ளேன். அடுத்த இரண்டு நாட்களுக்குள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன். கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை நடத்தி, ஆம் ஆத்மியைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார்.சட்டசபைக்கு அடுத்தாண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்க வேண்டும். மஹாராஷ்டிராவுடன் இணைந்து, இந்தாண்டு நவம்பரில் டில்லி சட்டசபைக்கும் தேர்தல் நடத்தும்படி தேர்தல் கமிஷனை கேட்க உள்ளோம். நான் நேர்மையானவன் என்பதற்கு மக்கள் ஒப்புதல் அளித்தால் தான், தேர்தலுக்குப் பின் முதல்வர் பதவியில் நானும், துணை முதல்வர் பதவியில் மணீஷ் சிசோடியாவும் அமர்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.

அரசியல் நாடகம்: பா.ஜ., கிண்டல்!

கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு ஒரு நாடகம் என, பா.ஜ., விமர்சித்துள்ளது. இது குறித்து, அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனாவல்லா கூறியதாவது:ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட போதே, தன் மனைவி சுனிதாவை முதல்வர் பதவியில் அமர்த்த கெஜ்ரிவால் திட்டமிட்டார். தற்போது அதற்காக ஒரு அரசியல் நாடகத்தை நடத்தியுள்ளார். சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில், கெஜ்ரிவால் பிஎச்.டி., செய்துள்ளார்.டில்லி மதுபான ஊழல் வழக்கில், கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் தான் வழங்கியுள்ளது; வழக்கில் இருந்து விடுவிக்கவில்லை. மேலும், கடுமையான நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதனால், பெயரளவுக்கு தான் அவர் முதல்வராக இருக்க முடியும். இதையடுத்தே, இந்த அரசியல் நாடகத்தை அவர் அரங்கேற்றியுள்ளார். இது அவருடைய விளம்பர உத்தி.இவ்வாறு அவர் கூறினார்.மற்றொரு செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியுள்ளதாவது:இந்த அறிவிப்பின் வாயிலாக, தான் குற்றம் செய்துள்ளதை கெஜ்ரிவால் ஒப்புக் கொண்டுள்ளார். கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களாலேயே அவர் பதவி விலகியுள்ளார். மக்களிடம் அனுதாபத்தை தேட முயற்சிக்கிறார். தன்னை நேர்மையானவர் என்று கூறிக் கொள்ளும் அவர், குற்றஞ்சாட்டப்பட்டபோதே அல்லது கைது செய்யப்பட்டபோதே பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

யாருக்கு வாய்ப்பு?

அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அடுத்து யார் முதல்வராவார் என்ற பேச்சு எழுந்துள்ளது. பல முக்கிய துறைகளை கவனித்து வரும் ஆதிஷிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தவிர, அமைச்சர்களாக உள்ள கைலாஷ் கெலாட், சவுரப் பரத்வாஜ், கோபால் ராய், இம்ரான் ஹூசைன் உட்பட பலரின் பெயர்களும் உலா வருகின்றன. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Venkatesan Srinivasan
செப் 17, 2024 09:53

நீதிமன்ற தீர்ப்பு விசாரணை முடிவில். MLA தேர்தல் நடைமுறை வெற்றி தனிப்பெரும்பான்மை பெறுவது மட்டுமே. மக்கள் விசாரணை செய்து தீர்ப்பு கொடுக்க முடியாது. "கிரௌட் ஜஸ்டிஸ்" முறையிலான நடைமுறை " பனானா ரிபப்ளிக்" நாடுகளில் மட்டுமே சாத்தியம்.


MP.K
செப் 16, 2024 14:57

துடைப்பம் மீதுள்ள களங்கங்களை போக்க வேண்டும் ஊழலுக்கு எதிராக போராடிய அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் இவ்வாறு வழக்கில் சிக்கி உள்ளது வருத்தம் அளிக்கிறது. இந்தியாவில் சுத்தமான அரசியல் வாய்ப்பே இல்லையா என்றுதான் தோன்றுகிறது. சுத்தம் செய்ய எடுக்கப்பட்ட துடைப்பம் இப்போது அழுக்குடன்


vijay
செப் 16, 2024 11:06

குற்றங்கள் ஆதாரங்கள் இருப்பதினால்தான் ஜெயிலில் போட்டிருக்காங்க, பெயில் கொடுப்பதும் பல மாதங்கள் நீட்டிக்கப்பட்டு இப்போது கொடுக்கறாங்க. ஆக, மொத்தத்தில் துடைப்ப தலைவர் அவரை குற்றவாளி என்று நிரூபணம் செஞ்சு ஜெயிலில் போட்டாலும், நான் ஜெயிலில் இருந்தாலும் முதல்வர் வேலை பார்ப்பேன், பார்க்கணும். இப்படிப்பட்ட கேடுகெட்ட தலைவர்களை என்ன சொல்வது. டெல்லி மக்கள் இனிமேலும் யோசிக்காமல் தமிழ்நாடு மாதிரி மீண்டும் வோட்டு போட்டாங்க என்றால் நாடு விளங்கிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை