வேலைக்காக ஆங்கிலம் கற்கலாம்: கன்னடத்தை மறந்துவிடக்கூடாது
மைசூரு : ''வேலை கிடைக்க ஆங்கிலம் கற்க வேண்டும். தொழில்நுட்பம், அறிவியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பது உண்மை தான். ஆனால், தாய் மொழியான கன்னடத்தை மறந்துவிடக்கூடாது,'' என, ராஜ்யசபா எம்.பி., சுதா மூர்த்தி தெரிவித்தார்.மைசூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட கன்னட விஸ்வகோஷா - 10, 13வது பதிப்புகளை, ராஜ்யசபா எம்.பி., சுதா மூர்த்தி வெளியிட்டார்.அவர் பேசியதாவது:பெண்கள், கன்னட கலைக்களஞ்சியம் போன்ற புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும். குழந்தைகளையும் படிக்க வைக்க வேண்டும். இதை கடமையாகவே கருத வேண்டும்.இன்றைய தேதியில், யாரும் துாய கன்னடம் பேசுவதில்லை. குறிப்பாக பெங்களூரில் கன்னடத்தின் நிலையை நினைத்து பார்த்தால் வேதனையாக இருக்கிறது.எனக்கு 19 வயது ஆனபோது, எனது தாய், எனக்கு ஒரு கன்னட கலைக்களஞ்சியத்தை கொடுத்தார். அதனால் தான், எனது ஆழான வேர்கள், கன்னடத்தில் உள்ளன. பல மொழிகள் தெரிந்தாலும், கன்னடம் தான் எனக்கு தாய்.இலக்கியத்தை படித்து அறிவை சேர்க்கும் மரபு கன்னடர்களுக்கு உண்டு. இந்த பெரிய குணத்தை நாம் இழந்து விடக்கூடாது. அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மைசூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட கன்னட விஸ்வகோஷா - 10, 13வது பதிப்புகளை, ராஜ்யசபா எம்.பி., சுதா மூர்த்தி பார்வையிட்டார். இடம்: மைசூரு.