உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெருமிதம்! பெண்களே நாட்டின் ஆன்மா: குஜராத்தில் பிரதமர் நெகிழ்ச்சி

பெருமிதம்! பெண்களே நாட்டின் ஆன்மா: குஜராத்தில் பிரதமர் நெகிழ்ச்சி

நவ்சாரி: ''நாட்டின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்று மஹாத்மா காந்தி கூறியுள்ளார். அதனுடன், கிராமங்களின் ஆன்மா பெண்கள் என்பதையும், அவர்களுக்கு அதிகாரமளித்தலே, கிராமங்களின் வளர்ச்சி என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்,'' என, லட்சாதிபதி சகோதரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, குஜ-ராத் மாநிலம் நவ்சாரியின் வான்சி பார்சி கிராமத்தில், லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தில் பயனடைந்த பெண்களுடன் பிரதமர் உரையாற்றினார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், நவ்சாரி தொகுதி எம்.பி.,யான சி.ஆர்.பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, 25,000 மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த, 2.5 லட்சம் பெண்களுக்கு, 450 கோடி ரூபாய் நிதி உதவியை அவர் வழங்கினார். இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

10 கோடி பெண்கள்

மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த, விவசாயம், கால்நடை பராமரிப்பு, சிறு தொழில்கள் வாயிலாக, ஆண்டுக்கு, 1 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் பெண்களை, லட்சாதிபதி சகோதரிகள் என்று அழைக்கும் திட்டத்தை, 2023ல் துவக்கினோம்.இதுவரை, 1.5 கோடி பெண்கள் ஏற்கனவே லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், இதை மூன்று கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.நம் நாடு உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. இதற்கான அடித்தளத்தை, லட்சக்கணக்கான பெண்களே இட்டுள்ளனர். மஹாத்மா காந்தி, நாட்டின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்பார். அதனுடன், கிராமங்களின் ஆன்மா பெண்கள் என்பதையும், அவர்களுக்கான அதிகார பரவலாக்கலே கிராமங்களின் வளர்ச்சி என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அந்த வகையில், நாடு முழுதும், 90 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களில், 10 கோடி பெண்கள் இடம்பெற்றுள்ளனர். குஜராத்தில் மட்டும் மூன்று லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயங்குகின்றன.பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடக்கும் நிலையில், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும், அதில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விரிவாக கையாளப்பட்டுள்ளது.புகார்கள் அளிப்பதை எளிமையாக்கி, விரைவில் நீதி கிடைப்பதை உறுதி செய்யும் பிரிவுகள் இந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

உலகின் பணக்காரன்

மகள் இரவில் தாமதமாக வீடு திரும்பும்போது, பெற்றோர் கேள்வி கேட்கின்றனர். ஆனால், அதுவே மகனாக இருந்தால் கேட்பதில்லை; அவர்களையும் கேட்க வேண்டும். பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது வீடுகளில் இருந்தே துவங்க வேண்டும். இந்த உலகின் மிகப் பெரும் பணக்காரன் நான்தான்; பணத்தால் அல்ல. மிகச் சிறந்த திட்டங்களை செயல்படுத்தியதற்காக, நம் தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் ஆசி, அன்பு எனக்கு கிடைத்துள்ளது. அந்த வகையில், நான் தான் பெரும் பணக்காரன்.இவ்வாறு அவர் பேசினார்.

பெண்களுக்கு கவுரவம்!

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தன் அனைத்து சமூக வலைதள கணக்குகளையும் பெண்களே கையாள்வர் என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.'நாரி சக்தி' எனப்படும் பெண் சக்தியை மதிக்கும் வகையில், பல தரப்பைச் சேர்ந்த பெண்கள், பிரதமரின் சமூக வலைதளங்களை நேற்று கையாண்டனர். அவர்கள் தங்களுடைய சாதனைகள், கடந்து வந்த பாதைகள், சவால்களை எதிர்கொண்டது என, அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, பீஹாரைச் சேர்ந்த காளான் வளர்ப்பின் வாயிலாக நூற்றுக்கணக்கானோருக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அனிதா தேவி, தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்தனர்.அணுசக்தி விஞ்ஞானி எலினா மிஸ்ரா, விண்வெளி விஞ்ஞானி ஷில்பா சோனி, பெண் தொழில் முனைவோரை உருவாக்கியுள்ள அஜைதா ஷா உள்ளிட்டோர், பிரதமரின் சமூக வலைதளத்தில் நேற்று தங்களுடைய பதிவுகளை வெளியிட்டனர்.

பெண்கள்!

குஜராத்தின் நவ்சாரியில், நடந்த நிகழ்ச்சியில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்னர். இந்த நிகழ்ச்சிக்கான முழு பாதுகாப்பையும், குஜராத் மாநில போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த பெண்களே கவனித்தனர். 2,165 பெண் கான்ஸ்டபிள்கள், 61 பெண் எஸ்.ஐ.,க்கள், 19 பெண் உதவி எஸ்.பி.,க்கள், ஒரு பெண் ஐ.ஜி., ஒரு பெண் ஏ.டி.ஜி., உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிகளை கவனித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை