ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தேர்தல் பணியில் இருந்த துணை கலெக்டரை சுயேச்சை வேட்பாளர் கன்னத்தில் அறைந்தார். அவரை கைது செய்ய போலீசார் முயன்ற போது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர். அதிவிரைவுப்படையினர் வரவழைக்கப்பட்டு கடும் போராட்டத்திற்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர்.தாக்குதல்
ராஜஸ்தானின் டோங் மாவட்டத்தில் உள்ள தியோலி - யுனியாரா சட்டசபை தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் சார்பில் வாய்ப்பு கிடைக்காத நரேஷ் மீனா சுயேச்சையாக போட்டியிட்டார். இதனால், கட்சி விதிகளை மீறியதாக அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சமரவதா கிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் அவர், துணை கலெக்டர் அமித் சவுத்ரியின் சட்டையை பிடித்து இழுத்ததுடன் அவரது கன்னத்தில் அறைந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.விளக்கம்
இதற்கு காரணம் கூறிய நரேஷ் மீனா, '' ஓட்டுச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டது. பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என அதிகாரிகள் அனைவரும் பணியாற்றுகின்றனர். பா.ஜ.,வுக்கு ஓட்டுப்போட நெருக்கடி கொடுக்கின்றனர். அமித் சவுத்ரி தவறு செய்ததால் தான் அவரை அறைந்தேன்.'' என்றார்.போலீசார் அளித்த விளக்கத்தில், '' கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். அவர்களுடன் அமித்சவுத்ரி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவரை நரேஷ்மீனா கன்னத்தில் அறைந்ததாக'' தெரிவித்தனர்.போராட்டம்
நரேஷ் மீனா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் குதிப்போம் என ராஜஸ்தான் மாநில அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நேற்று இரவு நரேஷ் மீனாவை போலீசார் கைது செய்ய முயற்சித்தனர். ஆனால், அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறியது. வன்முறை ஏற்பட்டதுடன், கல்வீசி தாக்குதல் நடத்தி பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டை வீசினர். இந்த மோதலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 60 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.ஆனால், நரேஷ் மீனாவிற்கு ஆதரவாக அமைதியாக போராட்டம் நடத்திய எங்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். குவிப்பு
இந்நிலையில் இன்று காலை ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய நரேஷ் மீனா, 'நான் போலீசில் சரணடைய மாட்டேன்' என்றார். மேலும் போலீசை சுற்றிவளைக்குமாறு ஆதரவாளர்களை தூண்டிவிட்டார். இதனையடுத்து அதிவிரைவுப்படையினர் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர். அவர்கள் கூட்டத்தினரை கலைத்து நரேஷ் மீனாவை கைது செய்ததுடன், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.Galleryகாங்., கண்டனம்
இந்நிலையில், அம்மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக குற்றம்சாட்டி உள்ளது.