| ADDED : ஏப் 17, 2024 12:58 AM
குவஹாத்தி, வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அசாம் - அருணாச்சல பிரதேச எல்லை அருகே நம்தாங் பகுதியில் நேற்று சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி தந்தனர்.இந்த சம்பவத்தில், அசாம் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை ஹெலிகாப்டர் வாயிலாக மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.