நகரங்களில் நாள்தோறும் நிலத்தில் விடப்படும் கழிவுநீர் 2,000 கோடி லிட்டர்!: பார்லி., நிலைக்குழு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
-நமது சிறப்பு நிருபர்- 'நம் நாட்டில் முக்கிய நகரங்களில் உற்பத்தியாகும் கழிவுநீரை விட, சுத்திகரிப்பு செய்யும் அளவு மிக குறைவாக இருக்கிறது. இதனால் நாளொன்றுக்கு 2,000 கோடி லிட்டர் கழிவுநீர் நேரடியாக நிலத்திலும், நீர்நிலைகளிலும் கலக்கவிடப்படுகிறது' என, பார்லி., நிலைக்குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நம் நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், நகரமயமாக்கலும் வேகமாக விரிவடைந்து வருகிறது. இதனால், வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர், சுற்றுப்புறச் சூழல் மற்றும் சுகாதாரத்திற்கு பெரும் சவாலை ஏற்படுத்தி வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் நகர்ப்புறங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது.அபாயம்
எனினும், நாள்தோறும் உற்பத்தியாகும் கழிவுநீரை விட, சுத்திகரிப்பு செய்யும் அளவு மிக குறைவாக இருக்கிறது என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான பார்லி., நிலைக் குழு கவலை தெரிவித்துள்ளது. தெலுங்கு தேச கட்சி எம்.பி., மகுந்தா ஸ்ரீநிவாசலு ரெட்டி தலைமையில் 31 உறுப்பினர்கள் கொண்ட இக்குழு, அம்ருத் திட்டத்தின் கீழ் நகரங்களின் கழிவுநீர் மேலாண்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நம் நாட்டில் உள்ள நகரங்களில் தோராயமாக நாளொன்றுக்கு 5,264.4 கோடி லிட்டர் கழிவு நீர் உருவாகிறது. ஆனால், நாளொன்றுக்கு 3,188.5 கோடி லிட்டர் கழிவுநீர் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு மட்டுமே நம் நாட்டின் நகரங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், நாள்தோறும் 2,070 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நிலத்திலும், நீர்நிலைகளிலும் கலக்கவிடப்படுகிறது. மத்திய பிரதேசம், தமிழகம், மேற்கு வங்கம், ஒடிஷா, ஜார்க்கண்ட் மற்றும் பீஹார் மாநிலங்கள் பாதாள சாக்கடை அமைப்புகளை விட, 'செப்டிக் டேங்க்' முறைகளையே அதிகம் நம்பி இருக்கின்றன. நகர்ப்புறங்களில் உள்ள, 60 சதவீத வீடுகளில், நகராட்சி வழிகாட்டுதல்களை பின்பற்றாமல், செப்டிக் டேங்க் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, அரசு நிர்ணயித்த அளவை விட மூன்று முதல் நான்கு மடங்கு வரை பெரிதாக கட்டப்படுகின்றன. அதிலும், 32 சதவீத செப்டிக் டேங்க்குகளில் மட்டுமே முறையாக சிமென்ட் பூச்சு செய்யப்படுகிறது. முறையற்ற சிமென்ட் பூச்சுகளால் நிலத்தடி நீர் மாசடையும் அபாயம் உள்ளது. பெரும்பாலான செப்டிக் டேங்க்குகளில் மனித கழிவுகள் மட்டுமே தேக்கப்படுகின்றன. சமையல் அறை மற்றும் குளியல் அறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பெரும்பாலும் நேரடியாக திறந்தவெளி சாக்கடைகளிலேயே திறந்து விடப்படுகின்றன.கடுமையான நீர்பற்றாக்குறை நிலவியபோதிலும், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவதில் மிக குறைந்த முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது. இடைவெளி
வரும் 2030க்குள் நாள்தோறும் 1,000 கோடி லிட்டர் கழிவுநீரை மறுசுழற்சி செய்து, நகர்ப்புற நீர் தேவையில் 20 சதவீதத்தை பூர்த்தி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதே சமயம், நகர்ப்புற கழிவுநீர் மேலாண்மையில் தற்போதும் பெரிய இடைவெளி காணப்படுகிறது. மஹாராஷ்டிரா, குஜராத், உத்தர பிரதேசம், தமிழகம், கர்நாடகா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தான் நாட்டின் பெரும்பகுதி சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவில்லை. மேலும், அதற்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.