கபீர் நகரில் துப்பாக்கிச்சூடு நடத்திய 3 சிறுவர்கள் பிடிபட்டனர்
புதுடில்லி:கபீர் நகரில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளையடிக்க முயன்ற மூன்று சிறுவர்களை, போலீசார் கைது செய்தனர். அதேபோல், ஜஹாங்கிர்புரியில், இரண்டு ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், சிறுவன் காயம் அடைந்தான்.வடகிழக்கு டில்லி, கபீர் நகரில் வசிப்பவர், சிறு வியாபாரி முர்சலீன். நேற்று முன் தினம் மாலை, இவரது வீட்டுக்கு வெளியே சில சிறுவர்கள், கண்ணாடி பாட்டில்களை உடைத்து, ரகளை செய்தனர். அப்போது, வீட்டில் இருந்து வெளியே வந்த முர்சலீனின் மருமகனை, சரமாரியாக தாக்கினர். மேலும், துப்பாக்கியால் சுவற்றில் சுட்டு, மிரட்டினர். இதுகுறித்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விரைந்து வந்த போலீசார், மூன்று சிறுவர்களையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், சில சிறுவர்களை தேடி வருகின்றனர். பிடிபட்ட மூவரிடமும் விசாரணை நடக்கிறது. சிறுவன் காயம்
பல குற்ற வழக்குகளில் தொடர்புள்ள சாகர் மற்றும் அவரது எதிர் கோஷ்டிக்கு இடையே, வடமேற்கு டில்லி ஜஹாங்கிர்புரியில் நேற்று, கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும், துப்பாக்கியால் சுட்டு மோதிக் கொண்டனர். சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே பூங்காவில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் தொடையில், துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. பூங்காவில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். போலீசார், காயம் அடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார், சாகர் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். சாகர் மீது ஏற்கனவே இரண்டு கொலை முயற்சி வழக்குகள், நிலுவையில் உள்ளன. கடந்த நவம்பரில் தான் ஜாமினில் வந்தார்.காயம் அடைந்த பீகாரைச் சேர்ந்த சிறுவன், ஜஹாங்கிர்புரி மதரஸாவில் தங்கி படித்து வந்தான்.