ஹபுர் : உத்தர பிரதேசத்தில் 50 வயது பெண்ணுக்கு, 14வது பிரசவமாக, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணின் மூத்த மகனுக்கு 22 வயது.உ.பி.,யின் ஹபுர் மாவட்டத்தின் பில்குவாவில் உள்ள மொகல்லா பஜ்ரங்புரியைச் சேர்ந்தவர் இமாமுதீன். இவரது மனைவி குடியா, 50. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 13 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகனுக்கு, 22 வயதாகிறது. இந்நிலையில், 50 வயதான குடியா, 14வது முறையாக கர்ப்பமாகி இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், பில்குவா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அவருடன், 22 வயது மூத்த மகனும் சென்றார். பில்குவா மருத்துவமனையில் இருந்த மருத்துவ பணியாளர்கள், மீரட் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி கூறி, 108 ஆம்புலன்சில் அவர்களை அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே குடியாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதையடுத்து, சாலை ஓரமாக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. டிரைவர் காமேஸ்வர், மருத்துவ உதவியாளர் கர்ம்வீர் இருவரும் பிரசவம் பார்த்தனர். இதில் குடியாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.இதையடுத்து, தாயும், சேயும் ஆம்புலன்சிலேயே அழைத்துச் செல்லப்பட்டு, மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், குடியா அளித்த பேட்டியில், “புதிதாக பிறந்த பெண் குழந்தையுடன் சேர்த்து எனக்கு ஒன்பது குழந்தைகள் தான். நான்கு மகன்கள், ஐந்து மகள்கள் உள்ளனர்,'' என்றார். ஆனால் மருத்துவமனை அறிக்கையில், குடியாவுக்கு 14வது பிரசவம் என்றும், பெண் குழந்தை பிறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.