மேலும் செய்திகள்
பாதுகாப்பு சட்டம்; வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்
23-Sep-2025
'ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக வழக்கறிஞராக பணியாற்றியவர்கள், மாவட்ட நீதிபதிகளாக நேரடியாக நியமனம் செய்ய தகுதியுடையவர்கள்' என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மாவட்ட நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமார், சதீஷ் சந்திர சர்மா, வினோத் சந்திரன் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர், மாவட்ட நீதிபதியாக நேரடியாக நியமனம் செய்ய தகுதி பெறுவார். ஆனால், ஒருவர் ஐந்து ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிவிட்டு, 10 ஆண்டுகள் இடைவெளிவிட்டு மீண்டும் இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினால், அவர் மாவட்ட நீதிபதி பதவிக்கு தகுதி பெறமாட்டார். அவர் இடைப்பட்ட காலத்தில் வழக்கறிஞராக இல்லை என்பது தான் கருத்தில் கொள்ளப்படும். எனவே, ஏழு ஆண்டுகள் தொடர்ந்து வழக்கறிஞராக பணியாற்றியவரை மட்டுமே மாவட்ட நீதிபதியாக நியமிக்க முடியும். மாவட்ட கூடுதல் நீதிபதி நியமனத்திற்கான தகுதி என்பது, தேர்வு செய்யும் நேரத்தில் பரிசீலிக்கப்படும்; விண்ணப்பிக்கும் காலத்தில் கருத்தில் கொள்ளப்படாது. வழக்கறிஞராக பணியாற்றி பெறும் அனுபவத்தை விட, நீதித்துறை அதிகாரிகள் பெறும் அனுபவம் அளப்பரியது. எனவே, அத்தகைய திறமை வாய்ந்த நீதித்துறை அதிகாரிகளை, மாவட்ட நீதிபதி பதவி நியமனத்திற்கான போட்டியிலிருந்து விலக்கி வைப்பது நியாயமில்லை. அரசு பிளீடர்கள், அரசு உதவி வழக்கறிஞர்கள், நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக பயிற்சி பெற்று வருபவர்கள், மாவட்ட நீதிபதி பதவிக்கு நேரடியாக விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களாக கருதப் படுகின்றனர். நீதித்துறை அலுவலர்களான இவர்கள், மாவட்ட நீதிபதி பதவிக்கு போட்டியிடக்கூடாது என கூறுவது முரண்பாடாக இருக்கிறது. மேலும் ஜூனியர்களாக இருப்பவர்கள், சீனியர்களுக்கு முன் பதவி உயர்வு பெறுவதால், மற்றவர்களுக்கு மன வருத்தம் ஏற்படும் என்ற வாதத்தையும் நிராகரிக்கிறோம். ஏனெனில், தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒருவர் மாவட்ட நீதிபதி பதவிக்காக பணியமர்த்தப்படுகிறார். இதனால், மற்றவர்கள் மன வருத்தம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அனைவருக்கும் சம வாய்ப்பு என்பதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட நீதிபதி மற்றும் கூடுதல் நீதிபதி பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது, விண்ணப்ப தேதியின்போது 35 ஆக பூர்த்தியாகி இருக்க வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து, இன்னும் மூன்று மாத காலத்துக்குள்ளாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப விதிகளை திருத்த வேண்டும். இவ்வாறு அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. - டில்லி சிறப்பு நிருபர் -
23-Sep-2025