ஆமதாபாத் தனியார் பள்ளியில் விபரீதம் 10ம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தி படுகொலை
ஆமதாபாத், : குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவரை 8ம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆமதாபாதின் கோக்ஹரா பகுதியில், 'செவன்த் டே அட்வென்டிஸ்ட்' என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ - மாணவியர் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும், மாடியில் இருந்து மாணவர்கள் இறங்கியபோது, ஒரு மாணவரின் முழங்கை, மற்றொரு மாணவரின் மீது மோதியது. இதனால், அந்த இரு மாணவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சண்டை இதில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவரும், 8ம் வகுப்பு பயிலும் மாணவரும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து சண்டை போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த 8ம் வகுப்பு மாணவர், தன் பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, 10ம் வகுப்பு மாணவரின் வயிற்றில் குத்திவிட்டு தப்பியோடினார். படுகாயமடைந்த மாணவரை பள்ளியில் இருந்த ஆசிரியர்களும், ஊழியர்களும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த மாணவர் நேற்று உயிரிழந்தார். இதனால், ஆவேசமடைந்த மாணவரின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பள்ளிக்குள் நுழைந்து மாணவரின் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்காத பள்ளி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். ஒரு கட்டத்தில் அதிக அளவில் மக்கள் திரண்டனர். அனைவரும் பள்ளிக்குள் நுழைந்து கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் அடித்து உடைத்தனர். தாக்குதல் பள்ளி பஸ்கள், ஆசிரியர்களின் வாகனங்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும், பள்ளியின் ஊழியர்கள், தலைமையாசிரியர், பிற ஆசிரியர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவானது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ஆவேசத்தில் இருந்த பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், பள்ளிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவர்களையும் தடுத்து நிறுத்தினர். இதனால், பதற்றம் தணிந்து நிலைமை கட்டுக்குள் வந்தது. சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இணை போலீஸ் கமிஷனர் ஜெய்பால் சிங், ''இரு மாணவர்களிடையே ஏற்பட்ட கைகலப்பு வன்முறையாக மாறி கொலையில் முடிந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட மாணவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்து உள்ளோம். 'உயிரிழந்த மாணவர் சிந்தி சமூகத்தை சேர்ந்தவர். கொலை செய்த மாணவர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர். இதனால், பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது,'' என்றார்.