காரில் சென்றவர் மீது சரமாரிய துப்பாக்கிச்சூடு
சத்தர்பூர்:மர்ம கும்பல் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காரில் சென்று கொண்டிருந்தவர் படுகாயமடைந்தார்.டில்லியின் புறநகர் பகுதியான ஆயா நகரைச் சேர்ந்தவர் அருண் லோஹியா. இவர் நேற்று பிற்பகல் காரில் சென்று கொண்டிருந்தார். தெற்கு டில்லியின் சத்தர்பூரில் அவர் சென்றபோது, சி.டி.ஆர்., சவுக் அருகே பிற்பகல் 1:00 மணி அளவில் ஒரு கும்பல் அவரை வழிமறித்தது.துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. இதில் அருண் படுகாயமடைந்தார். பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், அருணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சம்பவ இடத்தைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் 10 ரவுண்டுகள் வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்தது. அருணும் அவரை கொலை செய்ய முயன்றவர்களும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் இதனால் முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.