முன்னாள் மனைவி புகார் நடிகர் பாலா கொச்சியில் கைது
கொச்சி, விவாகரத்து ஆன பிறகும், தன்னையும், தன் மகளையும் நிம்மதியாக வாழ விடாமல் அவதுாறு பரப்புவதாக முன்னாள் மனைவி புகார் அளித்ததை தொடர்ந்து நடிகர் பாலாவை கேரள போலீசார் கைது செய்தனர். தமிழகத்தைச் சேர்ந்தவர் நடிகர் பாலா. சிறுத்தை, வீரம், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சிவாவின் சகோதரர். இவர், தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாள நடிகை அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.இந்நிலையில், கொச்சியில் உள்ள கடவந்தரா போலீஸ் ஸ்டேஷனில், பாலாவின் முன்னாள் மனைவி அம்ருதா சமீபத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், 'விவாகரத்தான நிலையில், என்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதுாறாக பேசி பாலா வீடியோ வெளியிட்டு வருகிறார். இது, என் 12 வயது மகளை மனதளவில் பாதித்துள்ளது. யு டியூப் சேனல்களிடம் பணம் பெற்றுக் கொண்டு என்னைப் பற்றி தரக்குறைவான பேட்டிகளை பாலா அளித்து வருகிறார். இதனால் நானும், என் மகளும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்' என, குறிப்பிட்டுள்ளார்.இதை தொடந்து கொச்சியில் உள்ள பாலாவின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரையும், அவரது மேலாளர் ராஜேஷ் என்பவரையும் நேற்று கைது செய்தனர்.அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாலாவின் வழக்கறிஞர் பாத்திமா சித்திக் தெரிவித்துள்ளார்.
போதை நடிகர் கைது
திருவனந்தபுரத்தின் கவுடியார் பகுதியில் இருந்து மானவீயம் நோக்கி கார் ஒன்று நேற்று காலை வேகமாக வந்தது. வெள்ளையம்பலம் சாலை சந்திப்பில், எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது கார் மோதியது. பொதுமக்கள் காரை மடக்கி பிடித்தனர். காரை ஓட்டி வந்தது நடிகர் பைஜு சந்தோஷ், 54, என்பது தெரிய வந்தது. அவர் மது அருந்தி இருந்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.