இளைஞர்களை அவமதிக்கும் கார்கே குடும்பம்: அசாம் முதல்வர் குற்றச்சாட்டு
குவஹாத்தி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அவரது மகன் பிரியங்க் கார்கே, இருவரும் இளைஞர்களை அவமதிப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.கர்நாடகத்திலிருந்து செமி கண்டக்டர் முதலீடுகள் அசாம்,குஜராத் மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்டதாக மத்திய அரசு மீது கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றம்சாட்டினார். இதை தொடர்ந்து கர்நாடக காங்கிரஸிற்கும், அசாம் பாஜவிற்கு வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மதிப்பிற்குரிய பூபன் ஹசாரிகாவை அவமதித்தார், இப்போது அவரது மகன் அசாம் இளைஞர்களை அவமதித்துவிட்டார். தந்தை மற்றும் மகன் இருவரும் அசாம் எதிர்ப்பு கொள்கையில் இருப்பது தெளிவாகிறது.குறைக்கடத்தி திட்டத்தின் கீழ் 15,000 இளைஞர்கள் பயிற்சி பெற்றதாக காங்கிரஸ் கூறுவது தவறு.15,000 இளைஞர்கள் அங்கு பயிற்சிக்காகச் செல்லவில்லை, இது மல்லிகார்ஜுன் கார்கேவின் மகனால் பரப்பப்பட்ட தவறான தகவல். அவரது கருத்துக்கள் அசாமின் திறன்கள் மற்றும் நமது இளைஞர்களின் வலிமை பற்றிய முழுமையான அறியாமையைக் காட்டுகின்றன.பூபன் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டபோது கூட, மல்லிகார்ஜுன் கார்கே “மிகவும் வெட்கக்கேடான கருத்துக்களை” தெரிவித்தார்.முழு கார்கே குடும்பமும் அசாம் எதிர்ப்பு மனநிலையைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது - தந்தை பூபன் ஹசாரிகாவை அவமதித்தார், இப்போது மகன் அசாமின் இளைஞர்களை அவமதிக்கிறார்.இவ்வாறு ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.