ஹிமாச்சலில் கனமழை சகதியில் புதைந்த வங்கி
                            வாசிக்க நேரம் இல்லையா?
                             செய்தியைக் கேளுங்கள் 
                              
                             
                            
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பணம் மற்றும் நகைகளுடன் கூட்டுறவு வங்கி சகதியில் புதைந்துள்ளது. கடந்த 20ம் தேதி பருவமழை துவங்கியதில் இருந்து, ஹிமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் மேக வெடிப்பு காரணமாக பெய்யும் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டது. மண்டி, சிம்லா, சிர்மாவுர் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள், குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடந்த 20ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் வரை 23 திடீர் வெள்ளப்பெருக்குகளும், அதைத் தொடர்ந்து 19 மேக வெடிப்பு சம்பவங்களும், 16 நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்களால் இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றும் கனமழை தொடர்ந்தது. மண்டி மாவட்டம் சில்பாதானி பகுதியில் பெய்த கனமழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டன; சிறிய பாலங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.துனாக் பகுதியில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தின் தரைத்தளத்தில், கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். கனமழை மற்றும் வெள்ளத்தால், இந்த கட்டடத்தின் தரைத்தளம் முழுதும் தண்ணீர் மற்றும் சகதியால் மூடப்பட்டுள்ளது. முதல் மாடி வரை சகதி தேங்கி உள்ளது.இதனால், கூட்டுறவு வங்கியில் இருந்த பணம் மற்றும் லாக்கர்களில் இருந்த நகைகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. அவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானதை அடுத்து, நேற்று வங்கி முன் ஏராளமானோர் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இது குறித்து கூட்டுறவு வங்கி மேலாளர் மோகன் கூறுகையில், ''இடிபாடுகளை அகற்றிய பின்னரே, வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகளின் நிலை குறித்து தெரிய வரும். யாரும் பதற்றமடைய வேண்டாம்,'' என்றார்.
தப்பிய பச்சிளம் குழந்தை
மண்டி மாவட்டத்தின் தல்வாரா கிராமத்தில் மேக வெடிப்பால் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால், தன் வீட்டுக்குள் புகுந்த வெள்ளத்தை தடுக்கும் பணியில் ரமேஷ்குமார், 31, மனைவி ராதா தேவி, 24, மற்றும் மாமியார் பூர்னு தேவி, 59, ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். மழை வெள்ளத்தில் மூவரும் அடித்து செல்லப்பட்ட நிலையில், ரமேஷ்குமாரின் உடல் நேற்று மீட்கப்பட்டது.மற்ற இருவரின் நிலை என்ன என்பது தெரியவில்லை; அவர்களும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, அவர்கள் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த 11 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. அது இறந்த ரமேஷ் - ராதா தேவி தம்பதியின் குழந்தை என தெரிய வந்தது. அந்த குழந்தை, ரமேஷின் உறவினரான தாரா தேவியிடம் ஒப்படைக்கப்பட்டது.