பெங்களூரு -- சென்னை விரைவு சாலை: கர்நாடக பகுதி பணி நிறைவு பெறுகிறது
பெங்களூரு- - சென்னை விரைவு சாலை திட்டம் 260 கி.மீ., துாரமாகும். இதில் கர்நாடகா பகுதி 71 கி.மீ., இந்த நான்கு வழி விரைவுச்சாலை, கர்நாடகா, ஆந்திரா வழியாக தமிழகத்தை அடைகிறது. இத்திட்டம் பொருளாதார வளர்ச்சியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும்.இதற்கான பணிகள் 17 ஆயிரத்து 900 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நடந்து வருகின்றன. இந்த சாலை பணிகள் முழுமை பெறும்போது, தற்போதைய 6 மணி நேர பயணம், 3 மணி நேரமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வேகமாக மணிக்கு 120 கி.மீ., வரை செல்லலாம்.இந்த திட்டத்தை எதிர்காலத்தில் எட்டு வழிச்சாலையாக விரிவுபடுத்தவும் வாய்ப்பு உள்ளது. இந்த விரைவு சாலையில் கர்நாடகாவில் ஹொஸ்கோட், மாலுார், தங்கவயல் ஆகிய இடங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.பெங்களூரில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய மண்டல அதிகாரி விலாஸ் பி பிரம்மங்கார் கூறியதாவது:பெங்களூரு - சென்னை விரைவுச்சாலையின் கர்நாடக பகுதி பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. ஹொஸ்கோட் ஜின்னா கிராஸ் அருகே, ஒரு கோவில் இடமாற்றம் செய்ததால், பணிகள் தாமதம் ஆயின. அநேகமாக இம்மாத இறுதிக்குள், கர்நாடக பகுதி சாலைப்பணிகள் நிறைவு பெறும்.பெங்களூரு -- சென்னை விரைவு சாலை திட்டம், ஒரு மைல் கல்லாக விளங்கும். இந்த சாலையால் கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களும் பயன்பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
மைல்கல்!
விரைவுச் சாலையின் கர்நாடக பகுதி மூன்று முக்கிய தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன.1.ஹொஸ்கோட் - மாலுார் வரை - 27.1 கி.மீ.,2. மாலுார் - பங்கார்பேட்டை - 27.1 கி.மீ.,3. பங்கார்பேட்டை - பேத்தமங்களா - 17.5 கி.மீ., எதிர்கால திட்டம்:விரைவு சாலைப் பணிகள் கடந்த மார்ச் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய நிலையை கவனித்தால், 2025ல் தான் முழு பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு- - சென்னை விரைவு சாலைத் திட்டம், பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்பது உறுதி. - நமது நிருபர் -