உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசுக்கு எதிராக ஜன., 16 முதல் கிராமங்கள்தோறும்... பிரசாரம்! இடஒதுக்கீடு விவகாரத்தில் பஞ்சமசாலி மடாதிபதி அதிரடி

அரசுக்கு எதிராக ஜன., 16 முதல் கிராமங்கள்தோறும்... பிரசாரம்! இடஒதுக்கீடு விவகாரத்தில் பஞ்சமசாலி மடாதிபதி அதிரடி

பல்லாரி: ''இடஒதுக்கீடு விவகாரத்தில், எங்களை ஏமாற்றிய காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஜனவரி 16ம் தேதி முதல், கிராமங்கள்தோறும் பிரசாரம் செய்வோம்,'' என்று, கூடலசங்கமா பஞ்சமசாலி மடத்தின் மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமி, அதிரடியாக அறிவித்து உள்ளார்.கர்நாடகாவின் வடமாவட்டங்களில் லிங்காயத் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். லிங்காயத்தின் உட்பிரிவான பஞ்சமசாலி சமூகத்தினர் தங்களுக்கு 2ஏ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, முந்தைய பா.ஜ., ஆட்சியின் போது 2022ல் போராட்டம் நடத்தினர்.கூடலசங்கமாவில் இருந்து பெங்களூரு வரை பஞ்சமசாலி சமூக மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமி தலைமையில், பாதயாத்திரை நடத்தினர். பெங்களூரில் 100 நாட்களுக்கு மேலாக போராட்டமும் நடந்தது. ஆனால் அவர்களுக்கு 2டி இடஒதுக்கீடு தான் கிடைத்தது. இதனால் அதிருப்தி அடைந்தனர்.காங்கிரஸ் தலைவர்கள் 2ஏ இடஒதுக்கீடு பெற்று தருவதாக கூறியதால், 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரசை ஆதரித்து வெற்றி பெற செய்தனர். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின், இடஒதுக்கீடு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அரசை கண்டித்து, சமீபத்தில் பெலகாவியில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, சுவர்ண விதான் சவுதாவை கடந்த 10ம் தேதி, டிராக்டர்களில் வந்து முற்றுகையிட பஞ்சமசாலி சமூகத்தினர் முடிவு செய்தனர்.அன்றைய தினம் பஞ்சமசாலிகள் மீது, போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அரசுக்கு எதிராக, மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமி வெகுண்டு எழுந்து உள்ளார்.'இனிமேல் இடஒதுக்கீடு கொடுங்கள் என்று அரசிடம் பிச்சை எடுக்க மாட்டோம். யார் எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பரோ அவர்களை அடுத்த தேர்தலில் தேர்ந்து எடுப்போம்' என்று கூறி இருந்தார். இந்நிலையில், விஜயநகராவின் ஹகரிபொம்மனஹள்ளி வட்டமனஹள்ளியில், பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமி நேற்று அளித்த பேட்டி:சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, எங்களை தரக்குறைவாக நடத்தியது; அவமானப்படுத்தியது. இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தியதால், எங்கள் மீது கருணையின்றி தடியடி நடத்தினர். இதுவரை முதல்வர், எங்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை. இடஒதுக்கீடு வழங்குவது சாத்தியம் இல்லை என்றும் முதல்வர் கூறி உள்ளார். அடுத்த தேர்தலில் எங்களை அரவணைக்கும் அரசை கொண்டு வருவோம்.எங்கள் மீது தடியடி நடத்தியது குறித்து, பெலகாவி கலெக்டர் முகமது ரோஷனிடம் இருந்து, முதல்வர் தகவல் பெற்று உள்ளார். தடியடி நடத்தியது சரி என்று பாராட்டி உள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாக, எங்கள் மீது பொய் குற்றச்சாட்டு சொல்கின்றனர். தடியடி நடத்தியதற்கு மன்னிப்பு கேட்கும் வரை நாங்கள் சும்மா விடமாட்டோம்.காங்கிரஸ் செய்து வரும் ஏமாற்று அரசியல் பற்றியும், மாநில அரசுக்கு எதிராகவும் ஜனவரி 16ம் தேதி முதல், கிராமங்கள்தோறும் சென்று பிரசாரம் செய்வோம். பஞ்சமசாலி சமூகத்தினரிடம், காங்கிரஸ் செய்த அவமானம் பற்றி எடுத்து சொல்வோம். அடுத்த தேர்தலில் யாருக்கு ஓட்டு என்பதை, சமூக மக்களே முடிவு செய்யட்டும். இனி, நாங்கள் அமைதியாக இருக்க போவது இல்லை.இவ்வாறு அவர் கூறினார். மடாதிபதியின் இந்த அறிவிப்பால், பஞ்சமசாலி சமூகத்தை சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 'ஏற்கனவே தொகுதியில் வளர்ச்சி பணிகள் செய்ய அரசு நிதி ஒதுக்கவில்லை. இப்போது இடஒதுக்கீடு பிரச்னை வேறு. 'எந்த முகத்தை வைத்து கொண்டு, அடுத்த தேர்தலில் ஓட்டு கேட்பது' என்று, பஞ்சமசாலி எம்.எல்.ஏ.,க்கள் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை