உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமித்ஷா மீதான கனடாவின் குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு கண்டனம்

அமித்ஷா மீதான கனடாவின் குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு கண்டனம்

புதுடில்லி: 'கனடாவில் வசிக்கும் சீக்கிய பிரிவினைவாதிகளை ஒழித்துக்கட்ட, உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார்' என, அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியிருப்பதை, இந்தியா கண்டித்துள்ளது. டில்லியில் உள்ள கனடா துாதரக அதிகாரியை, மத்திய அரசு அழைத்து தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார், 2023ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார். அதை மத்திய அரசு மறுத்தது.

வெளியேற்றியது

இந்த குற்றச்சாட்டால் இரு நாட்டு உறவு பாதிக்கப்பட்டது. எனினும், கனடா அரசு தன் நிலையை திருத்திக் கொள்ளவில்லை.இந்தியாவை பிரித்து, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு ஏற்படுத்தும் நோக்கத்தில், வெளிநாடுகளில் இருந்தபடி செயல்படும் பிரிவினைவாதிகளை தீர்த்துக் கட்ட, அந்தந்த நாடுகளில் உள்ள கூலிப்படையினரை இந்திய அரசின் உளவு அமைப்பு ஏவி விடுவதாக கூறியது.கனடாவில் உள்ள இந்திய துாதரகத்தில் பணியாற்றும், உயர் அதிகாரிகள் இந்த சதியில் சம்பந்தப்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டி, அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டது.அதற்குள் மத்திய அரசு அவர்களை நாடு திரும்புமாறு உத்தரவிட்டது. கனடாவுக்கான இந்திய துாதர் மற்றும் பல துாதரக அதிகாரிகள் இந்தியாவுக்கு திரும்பினர். கனடாவுக்கு பதிலடியாக, டில்லியில் உள்ள கனடா துாதரக அதிகாரிகளை மத்திய அரசு வெளியேற்றியது. அதை தொடர்ந்து, நிஜ்ஜார் கொலை வழக்கு புலனாய்வில், இந்திய துாதரகம் ஒத்துழைக்க மறுப்பதாக கனடா கூறியது.இந்தியா இந்த விஷயத்தில் கனடாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் வலியுறுத்தின. இந்நிலையில், அமெரிக்காவின், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிட்டது. கனடாவில் இயங்கும் கூலிப்படைகளை ஏவி, அங்குள்ள சீக்கிய பிரிவினைவாத தலைவர்களை ஒழித்துக் கட்டுமாறு, இந்திய உளவுப்படைக்கு உத்தரவிட்டவர் அமித் ஷா என்று, அந்த கட்டுரையில் கூறப்பட்டது.இது, இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கனடாவை கடுமையாக விமர்சித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.

மாறவில்லை

ஆனால், அதன் பிறகும் கனடா அரசு மாறவில்லை. வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு அமித் ஷா பற்றிய தகவலை ஊர்ஜிதம் செய்தது நான் தான் என, கனடா வெளியுறவு இணையமைச்சர் டேவிட் மோரிசன் கடந்த வாரம் கூறினார்.இந்த புகார் அபத்தமானது என்று மத்திய அரசு மறுத்தது. நேற்று டில்லியில் உள்ள கனடா துாதரக அதிகாரியை அழைத்து, கண்டனத்தை பதிவு செய்தது.இதுகுறித்து வெளியுறவு துறை அதிகாரி ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:கனடா அரசு மீண்டும் ஒரு பொய் குற்றச்சாட்டை கூறியுள்ளது. எவ்வித ஆதாரமும் கொடுக்காமல், இவ்வாறு குற்றச்சாட்டுகளை கூறுவது, கனடா அரசின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.சர்வதேச அரங்கில், இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதுடன், தன் தவறுகளை மறைக்க கனடா முயற்சிக்கிறது. இவ்வாறு பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது, இரு தரப்பு உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.அதற்கான பின்விளைவுகளையும் கனடா சந்திக்க நேரிடும்.நம் துாதரக அதிகாரிகள் சிலரிடம், அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கனடா அரசு கூறியுள்ளது. சர்வதேச விதிகள், துாதரக உறவு தொடர்பான மரபுகளை மீறி, கனடா இவ்வாறு அத்துமீறி உள்ளது.இதை ஒரு துன்புறுத்தலாக, மிரட்டலாக பார்க்கிறோம். ஏற்கனவே, பிரிவினைவாதிகளின் மிரட்டல்கள், அச்சுறுத்தல்களுக்கு இடையே, நம் துாதரக அதிகாரிகள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.இவ்வாறு அதிகாரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vasudevan
நவ 04, 2024 07:01

அடுத்த வருடம் நடக்கும் பாராளுமன்ற தேர்தலில், ஜஸ்டின் ட்ருடோ கட்சியும் அவரும் தோற்கடிக்கப்படுவார்கள். ட்ருடோவின் அரசியலுக்கு முடிவுரை எழுதப்படும். Minority அரசு காலீஸ்தான் ஆதரவு NDP கட்சியின் தயவால் காலத்தை ஓட்டுகிறது. NDP சொல்லும் எல்லாவற்றையும் முட்டாள்தனமாக ஆதரிக்கிறது.


சமீபத்திய செய்தி