மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம்
பெங்களூரு: மழைநீர் கால்வாயில், தண்ணீர் செல்வதற்கு எந்த பிரச்னையும் இல்லை என, காரணம் கூறி ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை நிறுத்த, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.பெங்களூரில் லேசான மழை பெய்தாலே, தாழ்வான இடங்களில் நீர் புகுந்து, அசம்பாவிதங்களை ஏற்படுத்துகிறது. நடப்பாண்டு அக்டோபரில் பெய்த கன மழையால், எலஹங்கா மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் நீர் புகுந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெள்ளம் சூழ்ந்ததால், இரண்டு, மூன்று நாட்கள் படகில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. 2013ல் வெள்ளம்
மழை நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட கால்வாய்களை சிலர் ஆக்கிரமித்ததால், அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. இது போன்ற வெள்ள பாதிப்பு 2013ல் ஏற்பட்ட போது, அன்றைய முதல்வர் சித்தராமையா, மழை நீர் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி, நீர் சுமுகமாக செல்ல வழி வகுக்கும்படி, பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.அதன்பின் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆரம்பத்தில் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள், ஷெட்டுகளை அதிகாரிகள் இடித்து தள்ளினர். ஆனால் அரசியல்வாதிகள், திரையுலக பிரமுகர்கள் ஆக்கிரமித்து கட்டிய சொகுசு பங்களாக்கள், மருத்துவமனைகள், வர்த்தக கட்டடங்களை இடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது, நடவடிக்கை எடுக்க தயங்கினர்.சர்வேயர்கள் பற்றாக்குறை, நீதிமன்ற உத்தரவு என, பல காரணங்களை கூறி, ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கிடப்பில் போட்டனர். நடப்பாண்டும் மழை சேதம் ஏற்பட்டதால், கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றும்படி முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் உத்தரவிட்டனர். அதிகாரிகளும் ஆக்கிரமிப்பை அகற்ற தயாராகினர். அவசியம் இல்லை
இந்நிலையில், எலஹங்காவில் 55 இடங்கள், கிழக்கு மண்டலத்தில் 12, மேற்கு மண்டலத்தில் 10, தெற்கு மண்டலத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில், மழை நீர் செல்வதில் எந்த பிரச்னையும் இல்லை. தண்ணீர் சுமுகமாக பாய்கிறது. ஆக்கிரமிப்பை அகற்றும் அவசியம் இல்லை என, அந்தந்த மண்டல கமிஷனர்கள், தலைமை கமிஷனர்கள் அறிக்கை அளித்துள்ளனர்.மழை நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. விசாரணையின் போது, விரிவான அபிடவிட் தாக்கல் செய்ய, மாநகராட்சி தலைமை கமிஷனர் முடிவு செய்துஉள்ளார்.