சினி கடலை
நடிகை அமுல்யா, திருமணமான பின் திரையுலகில் இருந்து ஒதுங்கி விட்டார். முழு நேர குடும்ப தலைவியாகி விட்டார். தன் இரட்டை குழந்தைகளை பராமரிப்பதில் ஈடுபட்டுள்ளார். இவரை திரையில் பார்க்க, ரசிகர்கள் இப்போதும் ஆவலாக உள்ளனர். ஆனால் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. அவ்வப்போது தன் கணவர், குழந்தைகளுடன் சுற்றுலா செல்கிறார்.சமீபத்தில் மைசூரின் மிருகக்காட்சி சாலைக்கு சென்றனர். குழந்தைகளுக்கு விலங்குகளை காண்பித்து மகிழ்வித்தனர். இங்குள்ள கருஞ்சிறுத்தையை, வெள்ளை மயிலை ஓராண்டுக்கு தத்து எடுத்துள்ளார். இதன் மூலம் தன் குழந்தைகளுக்கு இப்போதிருந்தே விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்துகிறார். விலங்குகளை யார் வேண்டுமானாலும் தத்து எடுக்கலாம். நடிகர்கள் தர்ஷன், சிக்கண்ணா, சுருஜன் லோகேஷ் உட்பட பலரும் விலங்குகளை தத்து எடுத்துள்ளனர்.மாறுபட்ட கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகர் விஜய் ராகவேந்திரா, தற்போது எப்.ஐ.ஆர்., 6 டு 6 என்ற படத்தில் நடிக்கிறார். 2025 ஜனவரியில் படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியானது. இது ஆக்ஷன், திரில்லர் கதையாகும்.மொத்த படத்தையும், இரவு நேரத்திலேயே படமாக்கி உள்ளனர். பல இரவுகள் துாக்கத்தை தியாகம் செய்து படப்பிடிப்பை நடத்தினராம். அதிகாலை 4:00 மணி வரை படப்பிடிப்பு நடந்தது. திட்டமிட்டபடியே படப்பிடிப்பு நடந்ததால், படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தெலுங்கு இயக்குனருடன் பணியாற்றிய ரமண ராஜ், இப்போது தனி இயக்குனராக மாறியுள்ளார்.பிரேம் இயக்கத்தில், நடிகர் துருவா சர்ஜா நடிப்பில் உருவாகும், கேடி (காளிதாஸ்) திரைப்படத்தின் 'சிவ சிவ' என்ற வரிகளில் துவங்கும் முதல் பாடல் வெளியாகி உள்ளது. தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஹிந்தியில் நடிகர் அஜய் தேவ்கான், தெலுங்கில் இயக்குனர் ஹரிஷ் சங்கர் பாடலை வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினர்.பாடல், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. படம் எப்போது திரைக்கு வரும் என, ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இது கன்னடத்துடன், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்க மற்றொரு காரணமும் உள்ளது. இதில் ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், பாலிவுட்டின் சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி உட்பட நட்சத்திர பட்டாளமே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கிருஷ்ணே கவுடா தயாரித்து, இயக்கிய லச்சி திரைப்படத்துக்கு, கோல்கட்டாவில் நடந்த இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் விருது கிடைத்துள்ளது. உள்நாடு, வெளிநாடுகளின் 300க்கும் மேற்பட்ட படங்கள், போட்டியில் பங்கேற்றன. இந்திய மொழிகளின் பிரிவில் லச்சி திரைப்படத்துக்கு, 'மிக சிறந்த திரைப்படம்' விருதை பெற்றது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது முன்னாள் அமைச்சர் லலிதா நாயக் எழுதிய காவியத்தை மையமாக கொண்டது. கிரிஷ்மா ஸ்ரீதர், தேஜஸ்வினி கவுடா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மனோஜ் நடலுமனே இயக்கத்தில், ராகுல் ஆர்கிட் நாயகனாக நடிக்கும், நீ நன்கே அல்வா திரைப்படத்துக்கு, காசிமா நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். போஸ்டர் வெளியிட்டு நாயகியை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர். இவர் ஏற்கனவே சில படங்களில் நடித்தவர்.நாயகனாக நடிக்கும் ராகுலுக்கு இது முதல் படமாகும். பார்வதி கவுடா, பவன் பரமசிவம், மனோகர் காம்பள்ளி இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்த பின், படப்பிடிப்பை துவக்க திட்டமிட்டுள்ளனர். அழகான லொகேஷன்களில் படப்பிடிப்பை நடத்த, படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.கணேஷ், பூஜாகாந்தி நடிப்பில், யோகராஜ் பட் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான முங்காரு மலே திரைப்படம் வெளியாகி, இன்றுடன் 18 ஆண்டு நிறைவடைகிறது. இதே நாளில் யோகராஜ் பட் இயக்கும் புதிய திரைப்படம் மனத கடலுவின் முதல் பாடல் வெளியாகிறது. இது அவரது 16 வது படமாகும்.முங்காரு மலே படத்தை தயாரித்த கிருஷ்ணப்பாவே, மனத கடலு வையும் தயாரிக்கிறார். படத்தின் முதல் பாடலை எழுதியவர் யோகராஜ் பட். ஹரி கிருஷ்ணா இசை அமைப்பில், சஞ்ஜித் ஹெக்டே பாடியுள்ளார். சுமுக் நாயகனாகவும், ராஷிகா ஷெட்டி, அஞ்சலி அனிஷ் நாயகியராக நடிக்கின்றனர்.