புதுடில்லி: காமன்வெல்த் விளையாட்டில் இம்முறை குத்துச்சண்டையில் தான் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. 7 தங்கம் உட்பட 10 பதக்கம் வென்று அசத்தியது. பளுதுாக்குதலில் மீராபாய் சானு 'ஹாட்ரிக்' தங்கம் வென்று சாதனை படைத்தனர். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 23வது காமன்வெல்த் விளையாட்டு நடந்தது. இந்தியா சார்பில் 122 பேர் பங்கேற்றனர். மொத்தம் 39 பதக்கம் (13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம்) வென்றனர். வெற்றி சதவீதம் 31 ஆக அமைந்தது. இது இது 2022 செயல்பாட்டினை விட அதிகம். கடந்த முறை 210 பேர் பங்கேற்று, 29 சதவீதத்தினர் தான் பதக்கம் (மொத்தம் 61) வென்றிருந்தனர். தவிர, இம்முறை 10 விளையாட்டுகள் மட்டுமே இடம் பெற்ற நிலையில், இந்திய நட்சத்திரங்கள் செயல்பாடு சிறப்பாகவே இருந்தன. அசத்திய 'பாரா'
காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவின் 11 பாரா நட்சத்திரங்களில் (மாற்றுத் திறனாளிகள்) 6 பேர் பதக்கம் வென்றது, இம்முறை 'ஸ்பெஷலாக' அமைந்தது. வலது கை பாதிக்கப்பட்ட திலிப் காவிட் (100 மீ.,), வலது கால் செயல் இழந்த சோமன் (குண்டு எறிதல்), குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஷர்மிளா (குண்டு எறிதல்) என 3 பேர் தங்கம் வென்றனர். 3 போட்டியில் மட்டும் 6 பதக்கங்கள் கிடைத்தன. இம்முறை 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என, 7 பதக்கம் கிடைத்தன. கடந்த 6 சீசனில் (2002-2022) 'பாரா' போட்டியில் இந்தியாவுக்கு மொத்தமே 7 பதக்கம் (1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) தான் கிடைத்து இருந்தன. ஏழு தங்கம்
குத்துச்சண்டையில் ஜாஸ்மின், சாக்சி, பிரீத்தி, சச்சின் உட்பட 7 பேர் தங்கம் வென்றனர். லவ்லினா உட்பட 3 பேர், வெள்ளி வென்றனர். மொத்தம் 10 பதக்கம் கிடைத்தது. காமன்வெல்த் குத்துச்சண்டை வரலாற்றில், 22 சீசனில் இந்தியாவுக்கு 11 தங்கம் மட்டும் கிடைத்தன. இம்முறை ஒரே சீசனில் 7 தங்கம் கைப்பற்றியது இந்தியா. பளுதுாக்குதலில் 1 தங்கம், 6 வெள்ளி,1 வெண்கலம் என 8 பதக்கம் கிடைத்தது. எதிர்பார்த்தபடி, மீராபாய் சானு, 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார். அஸ்மிதா அபாரம்
ஜூடோவில் அசத்திய அஸ்மிதா, காமன்வெல்த் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். மொத்தம் 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கம் கிடைத்தன. பாரா 'பவர் லிப்டிங்கில்' ஜண்டு குமார் மட்டும் பதக்கம் (வெண்கலம்) வென்று ஆறுதல் தந்தார்.
தமிழகம் 'மூன்று'
தமிழகம் சார்பில் இம்முறை தடகளத்தில் 6, பளுதுாக்குதலில் 1, பாரா தடகளத்தில் 1, பாரா பவர்லிப்டிங்கில் 1 என மொத்தம் 9 பேர் பங்கேற்றனர். இதில் ராஜா (பளுதுாக்குதல்), பிரவீன் சித்ரவேல் ('டிரிபிள் ஜம்ப்') வெள்ளி, செல்வ பிரபு ('டிரிபிள் ஜம்ப்') வெண்கலம் என 3 வீரர்கள் பதக்கம் வென்றனர்.
குத்துச்சண்டை தாயகம் பிவானி
இந்திய குத்துச்சண்டையின் தாயகமாக, ஹரியானா மாநிலத்தின் பிவானி திகழ்கிறது. கடந்த 1960-70 களில் தொடர்ந்து 11 ஆண்டு தேசிய 'ஹெவிவெயிட்' சாம்பியனாக திகழ்ந்த கேப்டன் ஹவா சிங், ஓய்வுக்குப் பின் 1986ல் பிவானியில் ஒரு பயிற்சி மையம் நிறுவினார். உலக அரங்கில் கியூபாவுக்கு அடுத்து, இதை 'மினி கியூபா' என அழைக்கின்றனர். இருப்பினும் பயிற்சியாளர் ஜகதீஷ் சிங், 2003ல் பிவானி குத்துச்சண்டை கிளப்பை துவக்கினார். இந்தியாவின் முதல் ஒலிம்பிக் குத்துச்சண்டை பதக்கம் வென்ற விஜேந்தர் சிங் (2008), இவரிடம் பயிற்சி பெற்றவர் தான். இம்முறை இந்தியா 7 தங்கம் வென்றது. இதில் சாக்சி, பிரீத்தி, பிரியா, ஜாஸ்மின், சச்சின் என 5 பேர், பிவானியில் பயின்றவர்கள்.
குல்வீர் 'இரண்டு'
தடகளத்தில் கடந்த முறை 37 பேர் பங்கேற்று, 1 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் வென்றனர். இம்முறை 32 பேர் களமிறங்கினர். குல்வீர் சிங் மட்டும் (10000 மீ.,ல் வெள்ளி, 5000 மீ.,ல் வெண்கலம்) இரண்டு பதக்கம் வென்றார். காயத்துடன் விளையாடிய தேஜஸ்வின் (டெகாத்லான்) வெண்கலம் வென்று சாதனை படைத்தார். நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) தங்கம் வெல்லாதது பெரிய ஏமாற்றம். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓட்ட போட்டிகளில் ஒரு பதக்கமும் வெல்லாதது அதிர்ச்சி. மொத்தம் 5 வெள்ளி, 5 வெண்கலம் மட்டும் கிடைத்தன.