| ADDED : நவ 11, 2025 03:28 AM
பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஒப்புதல் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, கடந்த 2023 செப்., 20ல் லோக்சபாவிலும், 21ல் ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டு, செப்., 28ல் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமானது. ஆனால், 'நாடு முழுதும் தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின்தான் பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு நடைமுறையை அமல்படுத்த முடியும்' என, மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், '2024 பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்' என, காங்கிரசைச் சேர்ந்த ஜெயா தாக்குர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வில் நேற்று வி சாரணைக்கு வந்தது. அப்போது, 'புதிதாக தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யும் வரை காத்திருக்காமல், பெண்கள் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என, மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. வலியுறுத்தல் அப்போது பேசிய நீதிபதிகள், 'இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரை கூட அரசியல் மற்றும் சமூக ரீதியில் சமதர்மத்தை வலியுறுத்துகிறது. 'நம் தேசத்தில், 48 சதவீதமாக உள்ள பெண்கள் மிகப்பெரிய சிறுபான்மையினராகத்தான் இருக்கின்றனர். இந்த மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்' என, உத்தரவிட்டனர். - டில்லி சிறப்பு நிருபர் -