உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; மேலும் ஒரு பெண் டாக்டர் கைது

டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; மேலும் ஒரு பெண் டாக்டர் கைது

புதுடில்லி: டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல, காஷ்மீரைச் சேர்ந்த 200 மருத்துவ மாணவர்கள் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். டில்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த அதீல் மற்றும் முசம்மில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றிய மற்றொரு டாக்டரான உமரும் காஷ்மீரில் பணியாற்றி வந்துள்ளான். கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் பல டாக்டர்களுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதனிடையே, டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பெண் டாக்டர் ஷாயின் சையத் மற்றும் மேலும் இரண்டு டாக்டர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றி வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தெற்கு காஷ்மீரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் பிரியங்கா ஷர்மாவை பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, கைது செய்யப்பட்ட டாக்டர் அதீல் அளித்த தகவலின் பேரில் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த பிரியங்கா ஷர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரியானாவைச் சேர்ந்த இவர், அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்துள்ளார். அவரது செல்போன் மற்றும் சிம் கார்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அதனை தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதேபோல, காஷ்மீரைச் சேர்ந்த 200 மருத்துவ மாணவர்கள் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். கான்பூர், லக்னோ, மீரட் மற்றும் ஷஹரன்பூர் உள்பட பிற நகரங்களில் காஷ்மீர் மாணவர்கள் பயிலும் கல்லூரிகள், பல்கலைகளையும் பயங்கரவாத தடுப்பு போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.

3 துப்பாக்கி குண்டுகள் மீட்பு

டில்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நடந்த இடத்தில், என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில், மூன்று துப்பாக்கிக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அதில் ஒரு குண்டு வெடித்தது. மற்ற இரண்டு துப்பாக்கி குண்டுகளும் வெடிக்காமல் உள்ளன. இருப்பினும், அந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள் ஏதும் மீட்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில், துப்பாக்கி குண்டுகள் எப்படி வந்தன என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை