சபரிமலையில் நெய் மோசடி தேவசம்போர்டு அதிகாரி கைது
திருவனந்தபுரம்: -மண்டல, மகர விளக்கு சீசனில், சபரிமலையில் நடந்த நெய் மோசடி தொடர்பாக, திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரி நேற்று கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், சபரிமலையில், பக்தர்களின் வசதிக்காக, திருவிதாங்கூர் தேவசம்போர்டு அபிஷேகம் செய்த நெய்யை, பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்து வந்தது. கடந்த சீசனில் இந்த விற்பனையில் பெரும் மோசடி நடந்ததாக புகார் எழுந்ததால், அதுகுறித்து விசாரணை நடத்த, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஊழல் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக, உதவி அர்ச்சகர்கள் உட்பட, 33 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டிருந்தது. விசாரணையில், 100 கிராம் அளவுள்ள, 13,679 பாக்கெட் நெய் விற்பனை செய்யப்பட்டு, அதற்கான தொகை, 13 லட்சத்து 67,900 ரூபாயை தேவசம்போர்டு கணக்கில் செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, நெய் விற்பனை பொறுப்பில் இருந்த அதிகாரி, சுனில் குமார் போத்தியை ஊழல் தடுப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். இவரை ஏற்கனவே திருவிதாங்கூர் தேவசம்போர்டு, 'சஸ்பெண்ட்' செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.