நெலமங்களா: கர்நாடகாவில் தொழிலதிபரின் கார் மீது, கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில், அவரும், அவர் குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.கர்நாடக மாநிலம் விஜயபுராவை சேர்ந்தவர் சந்திரயாகப்பா கவுல் 46; தொழிலதிபரான இவர், பெங்களூரில் ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் குடும்பத்துடன் வசித்தார். இவரது மனைவி கவுராபாய், 40; மகன் ஜான், 16; மகள்கள், தீக்ஷா, 12, ஆர்யா, 6. தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், அவரை பார்க்க நேற்று காலை சந்திரயாகப்பா தன் குடும்பத்தினர் மற்றும் தம்பி மனைவி விஜயலட்சுமி, 35 உடன், விஜயபுராவுக்கு காரில் சென்றார். காலை, 11:00 மணியளவில், பெங்களூரு புறநகர் நெலமங்களாவின் பெங்களூரு - துமகூரு தேசிய நெடுஞ்சாலை - 48ல், தாளகெரே அருகே கார் சென்ற போது, பக்கத்து சாலையில் எதிரே அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பு மீது மோதி, தொழிலதிபர் சந்திரயாகப்பா கார் மீது கவிழ்ந்தது. இதில், கார் முழுமையாக நொறுங்கியது. அதில் பயணம் செய்த தொழிலதிபர் குடும்பத்தினர் ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போக்குவரத்து போலீசார், மூன்று கிரேன்களை வரவழைத்து, காரின் மீது கவிழ்ந்திருந்த கன்டெய்னரை அப்புறப்படுத்தினர். அப்பகுதியினர் உதவியுடன், காரில் இருந்த உடல்களை மீட்டனர். இச்சம்பவத்தால், நெடுஞ்சாலையில் பல கி.மீ., வரை வாகனங்கள் அணிவகுத்தன. போக்குவரத்து ஸ்தம்பித்தது. மணிக்கணக்கில் வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன.