| ADDED : ஜன 11, 2024 11:33 PM
விஜயநகரா: “அயோத்தியில் ஸ்ரீராமன் கோவில் திறப்பு விழா அழைப்பை நிராகரித்ததன் மூலம், தன் உண்மையான நிறத்தை காங்கிரஸ் காண்பித்துள்ளது. நேரு குடும்பத்தினர், பாபர் சமாதிக்கு நான்கு முறை சென்று, பிரார்த்தனை செய்ததை நாட்டு மக்கள் மறக்கவில்லை,” என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு குற்றம்சாட்டினார்.விஜயநகராவில் நேற்று அவர் கூறியதாவது:நேரு கடந்த 1957 செப்டம்பர் 19ல், பாபர் சமாதிக்கு சென்று பிரார்த்தனை செய்தார். இந்திரா 1968 மற்றும் 1976ல், அங்கு சென்றார். 2005ல் மன்மோகன் சிங்கும், ராகுலும் பாபர் சமாதிக்கு சென்றனர்.சோமநாத சுவாமி கோவில் திறப்பு விழாவுக்கு, நேருவை அழைத்த போது, அழைப்பை நிராகரித்தார். இப்போது அயோத்தி ராமர் கோவில் விஷயத்திலும், நேரு வம்சத்தினர் அதே முடிவு எடுத்துள்ளனர். காங்கிரசாரின் ஹிந்து விரோத எண்ணத்தை, நாட்டு மக்கள் கவனிக்கின்றனர். எனக்கு அன்னமிட்டு வளர்த்தவர் ஜனார்த்தன ரெட்டிதான். அவர் மீண்டும் பா.ஜ.,வுக்கு வருவதில், எனக்கு ஆட்சேபனை இல்லை. கட்சிக்கு நல்லது நடக்கும் என்றால், அவரை மீண்டும் அழைத்து வருவதில் தவறில்லை.இவ்வாறு அவர் கூறினார்.