மலையாள படப்பிடிப்பில் ஜீப் விபத்து காயத்துடன் உயிர் தப்பிய நால்வர்
மூணாறு: மூணாறு அருகே மலையாள சினிமா படப்பிடிப்பின் இடையே ஜீப் கவிழ்ந்த விபத்தில் கேரள நடிகர்கள் ஜோஜூஜார்ஜ், தீபக்பரம்போல் உட்பட நான்கு பேர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர். இயக்குனர் ஷாஜிகைலாஷ் இயக்கத்தில் வரவு எனும் மலையாள சினிமா படப்பிடிப்பு கடந்த 2 வாரங்களாக மூணாறைச் சுற்றியுள்ள மாட்டுபட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. அதில் நடிகர்கள் ஜோஜூஜார்ஜ், தீபக்பரம்போல் உட்பட பலர் நடிக்கின்றனர். தலையார் எஸ்டேட் அருகே லக்கம் நீர்வீழ்ச்சி பகுதியில் உடுமலைபேட்டை ரோட்டில் நேற்று முன்தினம் படப்பிடிப்பு நடந்தது. இரவு 7:00 மணிக்கு ஜோஜூஜார்ஜ் ஜீப் ஓட்டுவது போன்றும் தீபக்பரம்போல் மற்றும் துணை நடிகர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முகம்மதுசுஹாஸ், துணை நடிகை கொச்சியைச் சேர்ந்த ஆர்த்ரா ஆகியோர் உடனிருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் நான்கு பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மூணாறில் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.