டில்லி சிறப்பு நிருபர்
முல்லை பெரியாறு அணையின் பயன்பாட்டை நிறுத்தி, புதிய அணை கட்டக்கோரிய மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.உச்ச நீதிமன்றத்தில் கேரளாவைச் சேர்ந்த, 'சேவ் கேரளா பிரிகேட்' என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவில், 'கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையின் பயன்பாட்டை நிறுத்தி, புதிய அணை கட்ட உத்தரவிட வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.வி.கிரி, “முல்லை பெரியாறு அணை, 130 ஆண்டுகள் பழமையானது. ''இந்த அணைக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவர். எனவே, முல்லை பெரியாறு அணையின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்றார். உடன் தலைமை நீதிபதி, “அணை வலுவாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்கலாம்,” என யோசனை தெரிவித்தார்.அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதியான சந்திரன், “பழமைவாய்ந்த அணை எந்த வகையில் பாதுகாப்பு குறைபாடுடன் இருக்கிறது என்பதை மனுதாரரான நீங்கள் விளக்க வேண்டும். புதிய அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் பிரச்னை ஏற்படலாம்,” என்றார். இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கிரி, “உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை பின்பற்றியே புதிய அணை கட்டப்படும்,” என்றார்.இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக, மத்திய அரசு மற்றும் தமிழக அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.