உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறப்பு அந்தஸ்து ரத்தால் ஜம்மு - காஷ்மீரில் வளர்ச்சி பெருமிதம்! திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

சிறப்பு அந்தஸ்து ரத்தால் ஜம்மு - காஷ்மீரில் வளர்ச்சி பெருமிதம்! திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

ஜம்மு: ''ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின், யூனியன் பிரதேசம் வளர்ச்சியை நோக்கி வேகமாக நடைபோடுகிறது,'' என, 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார். ஜம்மு - காஷ்மீரில், கல்வி, ரயில், விமானம் மற்றும் சாலை போக்குவரத்து துறைகளில், 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு, 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி ஜம்முவில் இருந்து நேற்று துவக்கி வைத்தார்.

மகிழ்ச்சி

அப்போது நடந்த கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:ஜம்மு - காஷ்மீரின் வளர்ச்சிக்கு சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 மிகப் பெரிய தடையாக இருந்தது. பா.ஜ., அரசு, 2019ல் அதை ரத்து செய்த பின், ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சிப் பாதையை நோக்கி நடைபோடுகிறது. வரலாற்றில் முதன்முறையாக, அரசின் வளர்ச்சி திட்டங்கள், ஜம்மு - காஷ்மீர் மக்களின் வீடு நோக்கி வர துவங்கியுள்ளன. ஒரு குடும்பத்தின் நலனை மட்டுமே முதன்மைப்படுத்தும் அரசால் சாமானியர்களின் நலனைப் பற்றி சிந்திக்க முடியாது. குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து ஜம்மு - காஷ்மீர் விடுபட்டுள்ளதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின், ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு முதன்முறையாக அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமூக நீதிக்கான உத்தரவாதம் கிடைத்தது.வளர்ந்து வரும் ஜம்மு - காஷ்மீர் குறித்து உலகம் முழுதும் மிகுந்த உற்சாகம் நிலவுகிறது. ஜம்மு - காஷ்மீருக்கான திட்டங்கள், அப்பகுதியின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும்.கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரில் மட்டும் 50 கல்லுாரிகள் நிறுவப்பட்டுள்ளன. நாட்டின் முன்னேற்றத்தில் பெண்கள் சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள், வங்கிகளில் கடன் வாங்கி, அவற்றை முறையாக திருப்பிச் செலுத்துகின்றனர்.ஜம்மு - காஷ்மீரில் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த கீர்த்தி சர்மா என்ற பெண், இதில் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டுள்ளார்.

லட்சாதிபதி

நாடு முழுதும் மூன்று கோடி பெண்களை லட்சாதிபதியாக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதற்கு பெண்கள் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.மேலும், 1,500 பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை பிரதமர் நேற்று வழங்கினார். 'வளர்ந்த பாரதம்; வளர்ந்த ஜம்மு' திட்ட பயனாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்க பாதை திறப்பு!

ஜம்மு - காஷ்மீரின், பனிஹால் - -காரி- - சம்பர்- - சங்கல்தான் வழித்தடத்தில், 48.1 கி.மீ., துாரத்துக்கான புதிய ரயில் பாதையை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். இதில், காரி - சம்பர் இடையே, 12.77 கி.மீ., தொலைவுக்கான நாட்டின் மிக நீண்ட சுரங்க ரயில் பாதை அமைந்துள்ளது. 'டி - 50' என்றழைக்கப்படும் இந்த சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணி, 2010ல் துவக்கப்பட்டு, 14 ஆண்டுகளுக்கு பின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ரயில் பயணியரின் பாதுகாப்புக்காக சுரங்க ரயில் பாதையின் அருகிலேயே ஆபத்து காலத்துக்கான மற்றொரு சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்க ரயில் பாதையின் ஒவ்வொரு 375 மீட்டர் தொலைவிலும், பயணியர் வெளியேறுவதற்கான இணைப்பு வழி அமைக்கப்பட்டுஉள்ளது. ஒருவேளை சுரங்கத்துக்குள் ரயில் விபத்து ஏற்பட்டால், பயணியர் அந்த இணைப்பு பாதை வழியே அருகில் உள்ள சுரங்கத்துக்கு சென்றுவிட முடியும். அதே போல, ரயிலில் தீ விபத்து ஏற்பட்டால், அதை அணைப்பதற்காக, ஒவ்வொரு 375 மீட்டர் தொலைவிலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும், 'வால்வு'கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஸ்ரீநகர் முதல் சங்கல்தான் வரையில், ஜம்மு - காஷ்மீரின் முதல் மின்சார ரயில் சேவை வசதியை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.அப்போது அவர், ''காஷ்மீருடன் கன்னியாகுமரியை ரயில் போக்கு வரத்து வாயிலாக இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை,'' என்றார்.

கல்வி வளாகம்

ஜம்மு - காஷ்மீர் தவிர நாட்டின் பிற பகுதிகளுக்கு, 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நேற்று துவக்கி வைத்தார். அதில் சத்தீஸ்கரின் பிலாய், ஆந்திராவின் திருப்பதி, ஜம்மு உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர வளாகம், தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள, ஐ.ஐ.ஐ.டி.டி.எம்., எனப்படும், வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துக்கு நிரந்தர வளாகம் ஆகியவற்றையும் பிரதமர் திறந்து வைத்தார்.மேலும், ஜம்மு, பீஹாரின் போத் கயா, ஆந்திராவின் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் புதிய கிளைகளையும், 20க்கும் மேற்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான புதிய கட்டடங்களையும் பிரதமர் திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ