| ADDED : ஆக 20, 2025 01:45 AM
புதுடில்லி :ஜம்மு -- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ, கடந்த 2019 ஆக., 5ல் மத்திய பா.ஜ., அரசு ரத்து செய்தது. இதையடுத்து அம்மாநிலம், ஜம்மு -- காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை 2023 டிசம்பரில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது; விரைவில் மாநில அந்தஸ்து வழங்கும்படி வலியுறுத்தியது. முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இதே கோரிக்கையை மத்திய அரசுக்கு முன்வைத்தனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஜம்மு -- காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் அளிக்கப்படும் என தெரிவித்திருந்தனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளால், அது நிறைவேற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், பார்லி.,யின் மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பான மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டாலோ அல்லது தடுப்பு காவலில் வைக்கப்பட்டாலோ, பிரதமர், மத்திய அமைச்சர் அல்லது மத்திய இணையமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.