பெங்களூரு, : கர்நாடகாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவன், 'கல்வி அமைச்சருக்கே கன்னடம் தெரியாது' என கூறியதால், அமைச்சர் மது பங்காரப்பா கோபமடைந்து, மாணவன் மற்றும் அவரது ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இலவச பயிற்சி வகுப்பு
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, பள்ளி மாணவர்கள் 25,000 பேருக்கு நீட், ஜே.இ.இ., மற்றும் சி.இ.டி., ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா பங்கேற்றார். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றனர். அவர்களுடன் அமைச்சர் மது பங்காரப்பா கலந்துரையாடினார். அப்போது மாணவர் ஒருவர், 'கல்வி அமைச்சருக்கே கன்னடம் தெரியாது' என பேசியதாகக் கூறப்படுகிறது. இதை கேட்டு கோபம்அமடைந்த அமைச்சர், 'யார் அது? நான் என்ன உருது மொழியா பேசுகிறேன்? எனக்கு கன்னடம் தெரியாது என கூறிய மாணவனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுங்கள். இது மிகவும் முட்டாள்தனமானது. இதற்காக அந்த மாணவன் வெட்கப்பட வேண்டும்' என, கொந்தளித்தார். கண்டனம்
மேலும், நிகழ்ச்சியில் தன் அருகில் அமர்ந்திருந்த பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் ரிதேஷ் குமார், மேல்நிலை கல்வி இயக்குனர் சிந்து ரூபேஷிடம், 'அந்த மாணவனின் ஆசிரியர், அந்த வட்டத்தின் கல்வி அதிகாரி யார்? இந்த விவகாரத்தை தீவிரமாக பாருங்கள்; உடனே நடவடிக்கை எடுங்கள்' என்றார். அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.அமைச்சர் மது பங்காரப்பாவின் இந்த செயலுக்கு, கர்நாடக பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ., வெளியிட்ட அறிக்கையில், 'அமைச்சர் மது பங்காரப்பாவே தனக்கு கன்னடம் சரளமாக தெரியாது என முன்னர் கூறினார். தற்போது அந்த மாணவன் அதை நினைவுபடுத்தி உள்ளான். 'இதற்காக மாணவனுடன் சேர்த்து ஆசிரியர், வட்டார கல்வி அதிகாரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்வது முட்டாள் தனமானது. 'இதுபோன்ற சர்வாதிகார போக்கு, ஜனநாயகத்துக்கு ஆபத்தானது' என கூறியுள்ளது.