உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சனாதன தர்மம் குறித்த கருத்து கேரள முதல்வர் திட்டவட்டம்

சனாதன தர்மம் குறித்த கருத்து கேரள முதல்வர் திட்டவட்டம்

திருவனந்தபுரம், ''சனாதன தர்மம் குறித்தும், ஆன்மிகவாதி நாராயண குரு குறித்தும் நான் கூறிய கருத்துக்களில் உறுதியாக இருக்கிறேன். என் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை,'' என, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கேரளாவில் மா.கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஆன்மிகவாதியும், சமூக சீர்திருத்தவாதியுமான நாராயண குருவின் சிவகிரி மடத்தில், சிவகிரி யாத்திரை மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்ற பினராயி விஜயன் பேசியதாவது:சனாதன தர்மம் என்பது வர்ணாசிரமத்தை போதிக்கிறது. அதாவது குலத் தொழிலை ஊக்குவிக்கிறது. ஆனால், நாராயண குரு அதை ஏற்கவில்லை. அவர், ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு கடவுள் என்பதை போதித்தார். அவர் எந்த நிலையிலும், சனாதன தர்மத்துக்கு ஆதரவாக கருத்து கூறியதில்லை; அதை பின்பற்றி நடக்கவும் இல்லை.உண்மையில் அவர், சனாதன தர்மத்தை சீர் செய்து தனி தர்மத்தை அறிவித்தார். வரலாற்றை ஆய்வு செய்தால் இந்த உண்மை தெரியும்.இவ்வாறு அவர் பேசியிருந்தார்.இதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சனாதன தர்மத்துக்கு எதிராகவும், நாராயண குருவுக்கு எதிராகவும் பினராயி விஜயன் பேசியுள்ளதாக அந்த கட்சி விமர்சித்திருந்தது.இது குறித்து, பினராயி விஜயன் நேற்று கூறுகையில், ''நான் என் கருத்தில் உறுதியாக இருக்கிறேன். நாராயண குரு குறித்தே பேசினேன். சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் வகையில் எதையும் கூறவில்லை. சனாதன தர்மம் குறித்த நாராயண குருவின் பார்வையை மட்டுமே வெளிப்படுத்தினேன்,'' என்றார்.

'மேல்சட்டை அணியலாம்!'

சிவகிரியில் நடந்த நிகழ்ச்சியில், அதன் தலைவரான சுவாமி சச்சிதானந்தா பேசுகையில், ''கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள், மேல்சட்டை அணியக்கூடாது என்பது சமூக நீதிக்கு எதிரானது. அந்த முறையை கைவிட வேண்டும்,'' என்றார்.அதை, நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் பினராயி விஜயன் ஆமோதித்து பேசினார்.இது குறித்து பினராயி விஜயன் நேற்று கூறியதாவது:ஒரு தேவசம் போர்டின் நிர்வாகிகள் என்னை சந்தித்தனர். அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மேல்சட்டை அணியக்கூடாது என்ற நடைமுறையை கைவிடப் போவதாக கூறியுள்ளனர். இது வரவேற்கக்கூடிய முடிவு.இவ்வாறு அவர் கூறினார்.ஆனால், எந்த தேவசம் போர்டு என்பதை அவர் தெரிவிக்கவில்லை.கேரளாவில் ஐந்து முக்கிய தேவசம் போர்டுகள் உள்ளன. குருவாயூர், திருவிதாங்கூர், மலபார், கொச்சின், கூடல்மாணிக்கம் ஆகிய ஐந்து தேவசம் போர்டுகளின் கீழ், 3,000 கோவில்கள் உள்ளன.

கடும் எதிர்ப்பு!

இது குறித்து, பா.ஜ., வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் வி.முரளீதரன் கூறியுள்ளதாவது:சனாதன தர்மம் என்பது மன்னராட்சியை ஊக்குவிக்கிறது; அது ஜனநாயகத்துக்கு எதிரானது என்ற தவறான கருத்தை விதைக்க பினராயி விஜயன் முயற்சிக்கிறார். பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும், நம் நாட்டுக்கு எதிராகவும் உள்ள தங்களுடைய ஓட்டு வங்கியை திருப்திபடுத்த இவ்வாறு அவர் பேசியுள்ளார்.சனாதன தர்மத்துக்கு எதிராக பொய்யான ஒரு கருத்தை பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை