ஜாதி, மதம், அரசியலை மறப்போம் ஆம் ஆத்மி எம்.பி., அறிக்கை
புதுடில்லி:“ஜாதி, மதம் மற்றும் அரசியல் ஆகியவற்றை மறந்து, நம் ராணுவத்துக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்,”என, ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ராகவ் சத்தா கூறியுள்ளார்.சமூக வலைதளத்தில் ராகவ் சத்தா வெளியிட்டுள்ள பதிவு:நண்பர்களை மாற்றலாம். ஆனால், அண்டை நாடுகளை அல்ல. பயங்கரவாதத்தை வளர்க்கும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு கடும் தண்டனை வழங்குவது நம் கடமை. நாம் பாகிஸ்தானை எதிர்க்கவில்லை. அந்நாட்டின் பயங்கரவாத செயலைத்தான் எதிர்த்துப் போரிடுகிறோம். நம் ராணுவத்தின் போராடும் விதத்தைப் பொறுத்தவரை, இந்த முறை பயங்கரவாதம் முடிவுக்கு வரும் என்பது உறுதி. துணிச்சலான வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நாம் ஆதரவாக நிற்க வேண்டும்.புத்தர் மற்றும் காந்தியின் சந்ததியினர் மட்டுமல்ல, பகத் சிங் மற்றும் சந்திரசேகர் ஆசாத் சந்ததியினரும் நாம்தான். ஒற்றுமையாக இருந்து நம் நாட்டுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். ஜாதி, மதம் மற்றும் அரசியல் கட்சியை எல்லாம் இந்த நேரத்தில் மறந்து விட வேண்டும். நாம் இந்தியர் என்பதை மட்டுமே நினைவில் வைத்திருக்க வேண்டும்.கடந்த 7ம் தேதி நடந்த 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பின், பதட்டம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து மூன்று நாட்களாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா, குப்வாரா மற்றும் பந்திபோரா மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.