மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு
வரப்பட்ட, 'விபி ஜி ராம் ஜி' மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு
மத்தியில் லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவின் நகல்களை
கிழித்தெறிந்து, மேஜை மீது ஏறி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம்
நடத்தியதால் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால், லோக்சபா நாள்
முழுதும் ஒத்திவைக்கப்பட்டது. நாட்டின் கிராமப் பகுதிகளில்
வறுமையை ஒழிக்கவும், வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், தேசிய ஊரக
வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005ல் அமல் படுத்தப்பட்டது. ஆரம்ப
கட்டத்தில் சோதனை ரீதியாக குறைவான மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட
இத்திட்டம், 2008ல் நாடு முழுதும் விரிவுபடுத்தப்பட்டது. அதன் பிறகே
இத்திட்டத்தின் பெயர் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்
என பெயர் மாற்றப்பட்டது. எதிர்ப்பு
இத்திட்டத்தின்படி, 100 நாட்களுக்கு வேலை உறுதி செய்யப்பட்டு, ஊதியம்
உள்ளிட்ட முழு செலவினங்களையும் மத்திய அரசு ஏற்றது. இந்நிலையில்,
இத்திட்டத்தின்படி, 125 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பிரதமர் மோடி
தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. மேலும், திட்டத்துக்கான
செலவினங்களில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் ஏற்கும்
வகையில் மசோதா தயாரிக்கப்பட்டது. மிக முக்கியமாக, திட்டத்தின்
பெயரில் ராம் என்று வரும் வகையில், 'விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம்
மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்' என பெயர் மாற்றப்பட்டது. அதாவது,
'விக்ஷித் பாரத் - கியாரண்டி பார் ரோஜ்கர் அண்டு அஜீவிகா மிஷன் - கிராமின்'
என்ற சட்டத்தின் பெயரை சுருக்கி, 'விபி ஜி ராம் ஜி' என்று அழைக்கப்
படுகிறது. இதற்கான மசோதா, இரு தினங்களுக்கு முன் லோக்சபாவில்
தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மஹாத்மா காந்தியின் பெயர்
நீக்கப்பட்டதற்கும், மாநில அரசுகள் மீது நிதிச்சுமை ஏற்றியதற்கும்
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக,
பார்லி., நிலைகுழுவுக்கோ அல்லது கூட்டுக் குழுவுக்கோ மசோதாவை அனுப்பி வைக்க
வேண்டும் என வலியுறுத்தினர். அமளி
அதே சமயம், மசோதாவை நிறைவேற்றும் முனைப்பில் மத்திய அரசு இருந்தது.
இதனால், நேற்று லோக்சபா கூடியதும், மசோதாவை நிறைவேற்றும் பணிகள்
சுறுசுறுப்படைந்தன. எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், மசோதாவுக்கு
எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். கைகளில் மஹாத்மா
காந்தியின் பதாகைகளை ஏந்தியபடி, சபையின் மையப்பகுதிக்கு வந்து மத்திய
அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால், சபையில் கூச்சல்
ஏற்பட்டது. எனினும் மத்திய ஊரக வேலைவாய்ப்பு துறை அமைச்சர் சிவராஜ் சிங்
சவுஹான், கடும் அமளிக்கு இடையே மசோதா பற்றி பேசத் தொடங்கினார். அவர் பேசிக்
கொண்டிருக்கும் போதே, மசோதாவின் நகல்களை எதிர்க்கட்சி எம்.பி.,க்கள்
துண்டு துண்டாக கிழித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஓட்டெடுப்பு
மேலும், சபையின் மையப்பகுதிக்கு சென்று கிழிந்த காகிதங்களை துாக்கி வீசி,
மத்திய அரசுக்கு எதிராக ஆவேசமாக முழக்கமிட்டனர். இதனால், லோக்சபாவில்
பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது குரல் ஒட்டுடெடுப்பு
நடத்தப்பட, 'ஜி ராம் ஜி' மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம்
பிர்லா அறிவித்தார். மேலும், அங்கு நிலவிய அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு நாள் முழுதும் சபையை ஒத்திவைத்தார்.
விரைவில் சட்டமாகிறது 'சாந்தி' மசோதா
அணுசக்தி துறையில், 100 சதவீத தனியார் முதலீட்டை அனுமதிக்கும் 'சாந்தி'
மசோதா, ராஜ்யசபாவில் நேற்று நிறைவேறியது. லோக்சபாவில், குரல் ஓட்டெடுப்பு
மூலம் இருதினங்களுக்கு முன் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து
ராஜ்யசபாவில் இம்மசோதா நேற்று நிறைவேறியது. இதனால், விரைவில் இம்மசோதா
சட்டமாகவுள்ளது. மசோதா குறித்து ராஜ்யசபாவில் பேசிய மத்திய அணுசக்தி துறை
இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங், “அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிப்பதன்
மூலம் கதிர்வீச்சு கசிவு ஏற்படுமா என்ற அச்சம் தேவையில்லை. இதுவரையிலும்
அவ்வாறு ஏற்பட்டதில்லை,” என்றார்.
திருவாரூரில் ஏர்போர்ட்: தி.மு.க., கோரிக்கை
தமிழகத்தின் திருவாரூரில் புதிய விமானம் நிலையம் அமைக்கப்படுமா என, நேற்று
கேள்வி நேரத்தின்போது தி.முக., - எம்.பி., பாலு லோக்சபாவில் கேள்வி
எழுப்பினார். அதற்கு பதில் அளித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்
மோகன் நாயுடு, “தமிழக அரசிடம் இருந்து முறைப்படி கோரிக்கை வந்தால், அது
குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும்,” என்றார்.- நமது டில்லி நிருபர் -