உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபாவில் அமளிக்கு மத்தியில் ஜி ராம் ஜி மசோதா நிறைவேறியது! நகல்களை கிழித்தெறிந்து எதிர்க்கட்சிகள் ஆவேசம்

லோக்சபாவில் அமளிக்கு மத்தியில் ஜி ராம் ஜி மசோதா நிறைவேறியது! நகல்களை கிழித்தெறிந்து எதிர்க்கட்சிகள் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட, 'விபி ஜி ராம் ஜி' மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவின் நகல்களை கிழித்தெறிந்து, மேஜை மீது ஏறி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால், லோக்சபா நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது. நாட்டின் கிராமப் பகுதிகளில் வறுமையை ஒழிக்கவும், வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005ல் அமல் படுத்தப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் சோதனை ரீதியாக குறைவான மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், 2008ல் நாடு முழுதும் விரிவுபடுத்தப்பட்டது. அதன் பிறகே இத்திட்டத்தின் பெயர் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என பெயர் மாற்றப்பட்டது.

எதிர்ப்பு

இத்திட்டத்தின்படி, 100 நாட்களுக்கு வேலை உறுதி செய்யப்பட்டு, ஊதியம் உள்ளிட்ட முழு செலவினங்களையும் மத்திய அரசு ஏற்றது. இந்நிலையில், இத்திட்டத்தின்படி, 125 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. மேலும், திட்டத்துக்கான செலவினங்களில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் ஏற்கும் வகையில் மசோதா தயாரிக்கப்பட்டது. மிக முக்கியமாக, திட்டத்தின் பெயரில் ராம் என்று வரும் வகையில், 'விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்' என பெயர் மாற்றப்பட்டது. அதாவது, 'விக்ஷித் பாரத் - கியாரண்டி பார் ரோஜ்கர் அண்டு அஜீவிகா மிஷன் - கிராமின்' என்ற சட்டத்தின் பெயரை சுருக்கி, 'விபி ஜி ராம் ஜி' என்று அழைக்கப் படுகிறது. இதற்கான மசோதா, இரு தினங்களுக்கு முன் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மஹாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கும், மாநில அரசுகள் மீது நிதிச்சுமை ஏற்றியதற்கும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, பார்லி., நிலைகுழுவுக்கோ அல்லது கூட்டுக் குழுவுக்கோ மசோதாவை அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அமளி

அதே சமயம், மசோதாவை நிறைவேற்றும் முனைப்பில் மத்திய அரசு இருந்தது. இதனால், நேற்று லோக்சபா கூடியதும், மசோதாவை நிறைவேற்றும் பணிகள் சுறுசுறுப்படைந்தன. எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். கைகளில் மஹாத்மா காந்தியின் பதாகைகளை ஏந்தியபடி, சபையின் மையப்பகுதிக்கு வந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால், சபையில் கூச்சல் ஏற்பட்டது. எனினும் மத்திய ஊரக வேலைவாய்ப்பு துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், கடும் அமளிக்கு இடையே மசோதா பற்றி பேசத் தொடங்கினார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, மசோதாவின் நகல்களை எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் துண்டு துண்டாக கிழித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஓட்டெடுப்பு

மேலும், சபையின் மையப்பகுதிக்கு சென்று கிழிந்த காகிதங்களை துாக்கி வீசி, மத்திய அரசுக்கு எதிராக ஆவேசமாக முழக்கமிட்டனர். இதனால், லோக்சபாவில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது குரல் ஒட்டுடெடுப்பு நடத்தப்பட, 'ஜி ராம் ஜி' மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். மேலும், அங்கு நிலவிய அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு நாள் முழுதும் சபையை ஒத்திவைத்தார்.

விரைவில் சட்டமாகிறது 'சாந்தி' மசோதா

அணுசக்தி துறையில், 100 சதவீத தனியார் முதலீட்டை அனுமதிக்கும் 'சாந்தி' மசோதா, ராஜ்யசபாவில் நேற்று நிறைவேறியது. லோக்சபாவில், குரல் ஓட்டெடுப்பு மூலம் இருதினங்களுக்கு முன் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ராஜ்யசபாவில் இம்மசோதா நேற்று நிறைவேறியது. இதனால், விரைவில் இம்மசோதா சட்டமாகவுள்ளது. மசோதா குறித்து ராஜ்யசபாவில் பேசிய மத்திய அணுசக்தி துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங், “அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிப்பதன் மூலம் கதிர்வீச்சு கசிவு ஏற்படுமா என்ற அச்சம் தேவையில்லை. இதுவரையிலும் அவ்வாறு ஏற்பட்டதில்லை,” என்றார்.

திருவாரூரில் ஏர்போர்ட்: தி.மு.க., கோரிக்கை

தமிழகத்தின் திருவாரூரில் புதிய விமானம் நிலையம் அமைக்கப்படுமா என, நேற்று கேள்வி நேரத்தின்போது தி.முக., - எம்.பி., பாலு லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, “தமிழக அரசிடம் இருந்து முறைப்படி கோரிக்கை வந்தால், அது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும்,” என்றார்.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

kulanthai kannan
டிச 19, 2025 11:04

காங்கிரஸுக்கு காந்தி மீது பாசம் பொங்கி வழிவதால், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தை மகாத்மா காந்தி விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யலாம்.


vbs manian
டிச 19, 2025 09:27

அந்த நாற்பது பெர்ஸன்ட் இடி போல் இறங்கி விட்டது. ஆட்டையை போட வாய்ப்பு சுருங்கி விட்டது.


S.F. Nadar
டிச 19, 2025 09:25

நாட்டை நாசமாக்க வேண்டும் என முடிவு பண்ணியாச்சு. இனி அந்த ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாது.


சந்திரசேகர்
டிச 19, 2025 08:31

ஏர்போர்ட் இருக்கும்.ஆனால் பிளைட் தான் இருக்காது


Ranganathan
டிச 19, 2025 08:23

ஊரான் வீட்டு தெய்வமே என் பெண்டாட்டி கையே என்ற பழமொழிக்கேற்ப இதற்கான நிதியை பலவிதமான துஷ்பிரயோகம் செய்த மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இனி 40% பங்களிப்பு மாநில அரசு என்பதால், கடிவாளம் போட்டு பணம் விரயம் கட்டுப்படுத்தப்பட்டு, போலி பயனாளிகள் வெளியேற்றப்பட வாய்ப்புகள் அதிகமாகிறது. சபாஷ் மத்திய அரசு. திருடனையே காவல்காரன் ஆக மாற்றிய சாமர்த்தியமான திட்டம்


Varadarajan Nagarajan
டிச 19, 2025 07:30

இதுவரை இந்த திட்டத்தால் மிகவும் வறண்ட பகுதிகளைத்தவிர மற்ற இடங்களில் விவசாயம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இந்த திட்டம் 100 சதவிகிதம் மத்திய அரசின் நிதியில் நடைபெறுவதால் மாநில அரசு அதில் கவனம் செலுத்தி வேலைகளை முறைப்படுத்தவில்லை. அநேகமாக எல்ல இடங்களிலும் பணியாளர்கள் மரத்தடியில் படுத்துறங்கி நேரத்தை கழிப்பதை நாம் அனைவரும் கண்கூடாக கண்டுள்ளோம். அதன் வீடியோ இணையத்தில் பல உள்ளன. இந்த திட்டத்தால் பயன்களைவிட பல இடங்களில் முறைகேடுகள்தான் அதிகம். மாநிலத்தின் பங்களிப்பும் சேர்க்கப்பட்டுள்ளதால் தற்பொழுது அதை எதிர்க்கிறார்.


Kasimani Baskaran
டிச 19, 2025 04:05

ஜனநாயகத்தை மதிக்காமல் மசோதாக்களை கிழித்தவர்களை இரண்டு கூட்டத்தொடருக்காவது தொங்க விட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை