UPDATED : மே 22, 2025 01:20 PM | ADDED : மே 22, 2025 01:15 AM
அஸ்வால்: ''நாட்டின் முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமாக மிசோரம் மாறியுள்ளது,'' என, அம்மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான மிசோரமில் அனைவருக்கும் கல்வி வழங்கும் முயற்சி, மத்திய - மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, அங்கு மாநில எழுத்தறிவு மையம் நிறுவப்பட்டது. புதிய இந்தியா எழுத்தறிவு திட்டத்திற்கான சர்வேயர்களாக, 'கிளஸ்டர்' வள மைய ஒருங்கிணைப்பாளர்கள் பணியாற்றினர்.இதன்படி, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 3,026 படிப்பறிவில்லாத நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில், 1,692 பேர் கல்வி கற்க விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கு கல்வியளிக்க 292 தன்னார்வ ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். மத்திய அரசின் உல்லாஸ் எனப்படும், 'சமூகத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்நாள் முழுதும் கற்றலை புரிந்துகொள்ளுதல்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பள்ளிகள், சமூக அரங்குகள், நுாலகங்கள் மற்றும் தேவைப்படுபவர்களின் வீடுகளில் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக, முழு எழுத்தறிவு பெற்ற முதல் மாநிலமாக மிசோரம் மாறியுள்ளது. தலைநகர் அஸ்வாலில் உள்ள மிசோரம் பல்கலையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், இந்த தகவலை மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:'உல்லாஸ்' தரநிலைகளின்படி, 95 சதவீத கல்வியறிவு விகிதத்தை தாண்டியுள்ளோம். இதனால், மிசோரம் முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாறியுள்ளது. நாங்கள் 98.2 சதவீத கல்வியறிவு விகிதத்தை அடைந்துஉள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.நாட்டின் முதல் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மிசோரம் மாறியதற்கு, மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி வாழ்த்து தெரிவித்தார்.கடந்த 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 91.33 சதவீதம் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்த மிசோரம் தற்போது முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.