மூணாறு சர்வதேச பொறுப்பு சுற்றுலா தலம் டிசம்பரில் அறிவிப்பு வெளியிட முடிவு
மூணாறு:மூணாறு சர்வதேச பொறுப்பு சுற்றுலா தலமாக மாற உள்ள நிலையில், அதற்கான அறிவிப்பை டிசம்பரில் வெளியிட சுற்றுலாதுறை முடிவு செய்தது.கேரளாவில் தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படும் மூணாறு பசுமையான சுற்றுச்சூழல், மலைகள், நீர்வீழ்ச்சிகள் என பல்வேறு சிறப்புகளுடன் சொர்க்க பூமியாக சுற்றுலா பயணிகளுக்கு விளங்குகிறது. அதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் சர்வதேச பொறுப்பு சுற்றுலா தலமாக மாறுகிறது.மூணாறிலும், சுற்றிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சுற்றுலா நடவடிக்கைகளை நிலையாகவும், பொறுப்புடனும் நடைமுறைபடுத்தும் வகையில் சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றும் வகையிலான செயல் திட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது. அதுகுறித்த அறிவிப்பை டிசம்பர் இறுதிக்குள் வெளியிட சுற்றுலா துறை முடிவு செய்தது. பொறுப்பு சுற்றுலா மிஷன் சொசைட்டி சார்பில் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு ஆரம்ப கட்ட பணிகளுக்கு சுற்றுலா துறை ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியது.மூணாறை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பகுதியாக மாற்றுவது, கார்பன் இன்றி மாசற்ற சுற்றுலாவை செயல்படுத்துவது, பெண்களுக்கு ஏற்ப சுற்றுலாவை மேம்படுத்துவது, கிராமப்புற சுற்றுலா திட்டங்களை செயல்படுத்துவது ஆகியவை திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் மூணாறில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும், சுற்றுலா நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும், அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும், சுற்றுலா தொழில் புரியும் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்க முடியும் எனவும், அதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும் எனவும் அதிகாரிகள் நம்புகின்றனர்.