புதிய தலைமை செயலகத்தில் தனி அறைகள் இல்லை: பிரதமர் அலுவலகத்துக்கு அதிகாரிகள் கடிதம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில், பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கான அலுவலகமான கர்தவ்யா பவனில், தனி அ றை ஒதுக்கப்படாததால் அரசு அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தலைநகர் டில்லியில், முக்கிய பகுதியான ராஜ பாதையின் பெயரை, 'கர்தவ்யா பாத்' என, 2022 செப்டம்பரில், மத்திய பா.ஜ., அரசு மாற்றியது. இதற்கு, 'கடமை பாதை' என பொருள். நவீன தொழில்நுட்பம் 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் கீழ், இந்தப் பகுதியில் மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அலுவலகங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கர்தவ்யா பாதை அருகே, 'கர்தவ்யா பவன்' அதாவது, 'கடமை பவன்' என்ற பெயரில், நவீன வசதிகளுடன் கூடிய 10 அரசு அலுவலகங்களை மத்திய அரசு கட்டி வருகிறது. இதில், 'கர்தவ்யா பவன் - 3' கட்டடத்தின் பணிகள் முடிந்ததை அடுத்து, சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி அதை திறந்து வைத்தார். அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக திறக்கப்பட்டுள்ள கர்தவ்யா பவன் - 3ல், மூத்த அதிகாரிகளுக்கு தனித்தனி அறைகள் அமைக்கப்படாததால், அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது தொடர்பாக, 13,000க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளின் கூட்டு நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய செயலக சேவை அமைப்பு, பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதி வருத்தத்தை வெளிப் படுத்தி உள்ளது. அதன் விபரம்: மிகவும் உணர்திறன் மற்றும் ரகசிய விஷயங்களைக் கையாளும் துணை செயலர்களுக்கு தனி அறை தேவை. ஆனால், அவர்களுக்கு திறந்த அலுவலகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், மூத்த அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளுடன் அவர்களின் தொலைபேசி மற்றும் நேரடி விவாதங்களை மற்றவர்கள் எளிதாகக் கேட்க முடியும். மனச்சோர்வு இது, ரகசியத்தன்மைக்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற இருக்கை ஏற்பாடு, மத்திய செயலக அதிகாரிகளுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும். எனவே இருக்கை ஏற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பழைய அலுவலகங்களில், பிரிவு அதிகாரிகள், துணை செயலர்கள் உள்ளிட்டோருக்கு தனித்தனி அறைகள் இருந்தன. புதிய அலுவலகத்தில் தனி அறைகள் இல்லாததால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.