UPDATED : செப் 25, 2024 10:32 PM | ADDED : செப் 25, 2024 10:19 PM
மும்பை: '' மஹாராஷ்டிரா மாநில முதல்வராக வேண்டும் என நான் நினைத்தேன். ஆனால், துணை முதல்வர் பதவி மட்டுமே கிடைத்தது,'' என அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார்.மஹாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இருந்து, ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் அஜித்பவார் தனி அணியாக பிரிந்து கூட்டணி ஆட்சியில் இணைந்தார். அவருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்த போதும், அஜித்பவார் துணை முதல்வராக பதவி வகித்து வந்தார். அம்மாநிலத்தில் 5 முறை துணை முதல்வர் பதவி வகித்த பெருமை இவருக்கு உண்டு.சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், இக்கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. முக்கியமாக அஜித் பவார் ஆதரவாளர்கள் தோல்வியை சந்தித்தனர். அவரது மனைவி கூட வெற்றி பெற முடியவில்லை.இந்நிலையில், ஆங்கில மீடியா ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் அஜித் பவார் பேசியதாவது: மஹாராஷ்டிரா முதல்வராக வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால், அந்த பதவியை என்னால் அடைய முடியவில்லை. அதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை.2004 ம் ஆண்டு முதல்வர் பதவியை பெறும் வாய்ப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. ஆனால், கட்சி மேலிடம் அதனை காங்கிரஸ் கட்சிக்கு அளித்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.இது சரியா
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவரும், சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலே பேசியதாவது: தேசியவாத காங்கிரஸ் தலைமை பதவியை நான் எப்போதும் கேட்டதில்லை. அது அவருக்கே கிடைத்து இருக்கும். அவர் கேட்டு இருந்தால் தலைமை பதவியை அவருக்கே அளித்து இருப்போம். இதற்காக கட்சியை உடைக்க தேவையில்லை. ஆனால், அவர் எங்களுக்கு இடையூறு செய்துவிட்டு பிரிந்து சென்றார். இவ்வாறு அவர் கூறினார்.