ஜூலை 21ல் துவங்குகிறது பார்லி., கூட்டத்தொடர்: விவாதத்துக்கு தயார் என்கிறது அரசு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
''பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ல் துவங்கி, ஆகஸ்ட் 12 வரை நடக்கும்,'' என, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அதற்கு பதிலடியாக நடத்தப்பட்ட 'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கை குறித்து விவாதிக்க பார்லிமென்டில் சிறப்புக் கூட்டத்தை கூட்டும்படி, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் விடாப்பிடியாக கோரிக்கை விடுத்து வருகின்றன. கடந்த 3ல் டில்லியில் கூடிய காங்., உள்ளிட்ட, 'இண்டி' கூட்டணியில் உள்ள 16 எதிர்க்கட்சித் தலைவர்கள், பார்லி., சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இது குறித்து, 200க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பினர்.ஆனாலும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையில் ஆர்வம் காட்டாத மத்திய அரசு, 'வழக்கமான மழைக்கால கூட்டத்தொடர் சில வாரங்களில் துவங்கவுள்ள நிலையில், சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வாய்ப்பில்லை' எனக்கூறி கைவிரித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தான், டில்லியில் பார்லிமென்ட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடந்தது. பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:மழைக்கால கூட்டத்தொடரை அடுத்த மாதம் 21ல் துவங்கி, ஆகஸ்ட் 12ல் நிறைவு செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் இரு சபைகளிலும் விவாதிக்கப்படும். மத்திய அரசை பொறுத்தவரையில், அனைத்து கட்சிகளையும் அனுசரித்து செல்லவே விரும்புகிறது. கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதற்காகவே ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவர்களிடமும் பேசி வருகிறோம். அனைவரது ஒத்துழைப்பையும் அரசு எதிர்பார்க்கிறது. பார்லிமென்டை சுமுகமாக நடத்தி, இரு சபைகளிலும் முக்கிய அலுவல்களை விரைந்து மேற்கொள்வதில் ஒற்றுமையுடன் செயல்பட அனைவரும் முன்வருவர் என்று நம்புகிறோம். விவாதத்திற்கு அரசு தயாராகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.ஏன் இந்த அவசரம்?பொதுவாக மழைக்கால கூட்டத்தொடர் துவங்குவது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும். ஆனால், இதுவரை இல்லாத வகையில், 47 நாட்கள் முன்னதாகவே கூட்டத்தொடர் குறித்த அவசர அறிவிப்பு வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதல், ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தில் இருந்து தப்பவே, 47 நாட்கள் முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்.,
நீதிபதி வர்மா பதவி நீக்க தீர்மானம்!
டில்லியில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஜூலை 2ம் தேதி நடக்க உள்ள பார்லிமென்ட் கூட்டத்தொடரில், அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம், நீதித் துறையில் உள்ள ஊழல் தொடர்பான விஷயம். இந்த விவகாரத்தில், நாங்கள் ஒருமித்த கருத்தை எட்ட விரும்புகிறோம். இதில், எந்த ஒரு அரசியலுக்கும் இடமில்லை. இந்த விஷயத்தை பற்றி விவாதித்து முடிவெடுக்க, பார்லிமென்ட் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். எனவே, நான் அனைத்து அரசியல் கட்சிகள் இடையேயும் ஒருமித்த கருத்தை கேட்டு வருகிறேன்; மேலும், முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடலை துவங்கியுள்ளேன். இது தொடர்பாக அனைவரையும் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை, அனைத்து கட்சிகளும் கூட்டாக முன்மொழிய வேண்டும். அதில், ஒரு தரப்பினர் கூறுவதை மட்டும் முக்கியமானதாக நாங்கள் கருத்தில் கொள்ள மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -