அனைத்து துறைகளிலும் சீர்திருத்தம்; பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
ஜெய்ப்பூர் : “சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகிய தாரக மந்திரத்துடன் நம் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம், அனைத்து துறைகளிலும் பிரதிபலிக்கிறது,” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.
அதன்பின் அவர் பேசியதாவது:
நம் நாட்டின் வர்த்தக சூழல், சர்வதேச வர்த்தக வல்லுநர்களையும், முதலீட்டாளர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகிய தாரக மந்திரத்துடன் நம் நாடு கண்டுள்ள முன்னேற்றம் ஒவ்வொரு துறையிலும் பிரதிபலிக்கிறது. நாட்டின் வளர்ச்சி என்பது மாநிலத்தின் வளர்ச்சியின் வாயிலாக அமைகிறது. ராஜஸ்தான் தன் வளர்ச்சியில் புதிய உச்சங்களை எட்டும்போது, நம் நாடும் புதிய உச்சங்களை எட்டும்.கடந்த 10 ஆண்டுகளில், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. நம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளன. அன்னிய நேரடி முதலீடும், இருமடங்கு அதிகரித்துள்ளது.தொழில்நுட்பம் மற்றும் தரவுகள் சார்ந்த நுாற்றாண்டு இது. ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் தரவு ஆகியவற்றின் உண்மையான சக்தியை இந்தியா, உலகிற்கு உணர்த்தியுள்ளது. யு.பி.ஐ., போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளன. எங்கள் அரசு, வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தின் மந்திரத்தில் செயல்படுகிறது. இதன் வாயிலாக, ராஜஸ்தான் பலன் அடைந்துள்ளது.வரும் ஆண்டுகளில், உலகின் இளம்நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இந்தியா திகழும். நம் நாட்டின் பாரம்பரியத்தை இளைய சமுதாயத்தினர் முன்னெடுத்து செல்ல உதவுவர். இதை கருத்தில் வைத்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கடந்த 10 ஆண்டுகளில், நம் நாட்டின் இளைஞர் சக்தி, புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி வருகிறது.இது, தொழில்நுட்பம் மற்றும் தரவு சார்ந்த வளர்ச்சியின் வாயிலாக வெளிப்பட்டு வருகிறது. இன்றைய உலகில் ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்பம் மற்றும் தரவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
அதானி குழுமம் ரூ.7.5 லட்சம் கோடி முதலீடு
ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கும் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் வாயிலாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த மாநிலத்தில் மட்டும் 7.5 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யப்போவதாக அதானி குழும நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து அதானி துறைமுகங்களின் தலைமை நிர்வாக இயக்குநர் கரண் அதானி கூறுகையில், “பசுமை ஆற்றல் திட்டத்தின் வாயிலாக 100 ஜிகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம். இதேபோல் நீர்மின் திட்டங்கள் வாயிலாக, 1.8 ஜிகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இதுதவிர, கூடுதலாக நான்கு சிமென்ட் உற்பத்தி தொழிற்சாலைகளையும் அமைக்க உள்ளோம்,” என்றார்.இதேபோல், ஆதித்யா பிர்லா குழுமம் ராஜஸ்தான் மாநிலத்தில் 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த குழுமம் சிமென்ட், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது.