துமகூரு ரயில் நிலையம் பெயர் மாற்ற ஆலோசனை
துமகூரு: துமகூரு சித்தகங்கா மடத்துக்கு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று வந்தார். பின் அவர் அளித்த பேட்டி:எங்கள் குடும்பத்துக்கும், சித்தகங்கா மடத்துக்கும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. சமீபத்தில் சிவகுமார சுவாமிகளின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. என்னால் வர முடியவில்லை. எனவே, சித்தலிங்க சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றேன். துமகூரு ரயில் நிலையத்துக்கு, சிவகுமார சுவாமிகளின் பெயரை சூட்டும்படி, பலரிடம் இருந்து வேண்டுகோள் வந்துள்ளது. ரயில் நிலையத்துக்கு அவர் பெயரை வைத்தால், அவரது பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும். இது குறித்து, முதல்வர் சித்தராமையாவுடன் கலந்து ஆலோசித்து, முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.