இன்றைய காலத்தில் அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் நல்ல முறையில் பாடம் நடத்தி, மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதே, பெரிய விஷயமாக உள்ளது. பெயரளவில் பணியாற்றுவோரே அதிகம். அதே சமயம், ஆசிரியர் தொழிலை சேவையாக நினைக்கும் ஆசிரியர்களும் உள்ளனர். இதற்கு, கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சித்தமல்லா கோத்தா சிறந்த எடுத்துக்காட்டு.கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம், அடஹள்ளட்டி கிராமத்தில் உள்ள பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் சித்தமல்லா கோத்தா, தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர், தன் பள்ளிக்கு மாணவர்களை ஈர்க்க முயற்சிக்கிறார். முன் மாதிரி
பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவரின் பெயரில், தன் சொந்த பணத்தில் 1,000 ரூபாயை வங்கியில் டிபாசிட் செய்கிறார். நடப்பாண்டு ஒன்பது மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களின் பெயரில் வங்கியில் 1,000 ரூபாய் டிபாசிட் செய்துள்ளார். கர்நாடகா - மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள இந்தப்பள்ளி, 2005ல் திறக்கப்பட்டது; 2015 வரை, ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை, 60 - 70 மாணவர்கள் இருந்தனர். ஆனால், ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறையால், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது.சித்தமல்ல கோத்தா, இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக, 2023ல் நியமிக்கப்பட்டார். பள்ளிக்கு மாணவர்களை ஈர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறார். கிராமத்தின் துவக்க, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக, வினாடி - வினா போட்டி ஏற்பாடு செய்து, தன் சொந்த செலவில் பரிசு வழங்குகிறார். கோடை காலத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்துகிறார். நன்கொடையாளர்களின் உதவி பெற்று, பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்கிறார். ஒன்றாம் வகுப்பில் இருந்தே மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிக்கிறார். அரசு பள்ளிக்காக இவர் செய்யும் சேவை, மற்றவருக்கு முன் மாதிரியாக உள்ளது. சிறிய முயற்சி
தலைமை ஆசிரியர் சித்தமல்ல கோத்தா கூறியதாவது: கடந்தாண்டு எங்கள் பள்ளியில், ஒன்றாம் வகுப்பில் இரண்டு மாணவர்கள் இருந்தனர்; நடப்பாண்டு ஒன்பதாக உயர்ந்துஉள்ளது. மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அவர்களின் பெயரில் வங்கியில், 1,000 ரூபாய் டிபாசிட் செய்வது, என் சிறிய முயற்சி. இதன் பயனாக, ஒன்றாம் வகுப்பு மட்டுமின்றி மற்ற வகுப்புகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -